Main Menu

ஈரானின் முழு பலத்தை தெரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை: தளபதி மகள் எச்சரிக்கை

ஈரானின் முழு பலத்தை அமெரிக்கா தெரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை என அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காசிம் சோலெய்மனியின் மகள் செய்னப் கூறியுள்ளார்.

ஈராக்கில் உள்ள பக்தாத் சர்வதேச விமான நிலைய வளாகத்தில், கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான ஏவுகணைத் தாக்குதலில், ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காசிம் சோலெய்மனி, ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய தளபதி அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் தளபதி காசிம் சோலெய்மனியின் இறுதி ஊர்வலம் நேற்று (திங்கட்கிழமை) பல லட்ச மக்களின் கண்ணீருடன் நடைபெற்றது. இந்த இறுதி ஊர்வலத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘என் அப்பாவை கொன்றுவிட்டார்கள். அவருக்கு எவ்வளவு மக்கள் ஆதரவு இருந்தது என்று இந்த கூட்டத்தை பார்த்தால் உங்களுக்கு தெரியும். சுலைமானி மகள் செய்னப் வெறிபிடித்த டிரம்ப்தான் இப்படி செய்தது. எல்லாம் முடிந்துவிட்டது.

என் அப்பாவை கொன்றால் கதை முடிந்தது என்று அவர் நினைக்கிறார். ஆனால் ட்ரம்ப் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். எதுவும் முடியவில்லை. இதுதான் தொடக்கம்.

அமெரிக்கா மீது ஈரான் மிக கடுமையான தாக்குதல் நடத்தும். டிரம்பை இதற்காக பழி வாங்காமல் ஈரான் விடாது. ஈரானின் முழு பலத்தை அமெரிக்கா தெரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை.

அமெரிக்க குடும்பங்கள் வருத்தப்படும். ஈராக்கில் இருக்கும் தங்கள் குடும்பத்தை சேர்ந்த அமெரிக்க இராணுவ வீரர்களை அவர்கள் இனி பார்க்க முடியாது. அவர்களின் குடும்பம், இராணுவ வீரர்களின் மரணத்தை மட்டும்தான் பார்க்க போகிறது’ என கூறினார்.

ஈராக்கில் உள்ள 5,000 அமெரிக்க படைகளை வெளியேற்றுவதற்காக, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் ஈராக்கிலுள்ள அமெரிக்க படைகளை வெளியேற கட்டாயப்படுத்தினால், ஈராக்கிற்கு கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பகிரவும்...