குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு: சோகத்தில் முடிந்த மென்பொருள் பொறியாளரின் வாழ்க்கை
நொய்டாவைத் தளமாகக் கொண்ட Adobe நிறுவனத்தில் பணியாற்றி வந்த வினய் குப்தா என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைக்கு மருந்து கொடுப்பது தொடர்பாக வினய் குப்தாவுக்கும் அவரது மனைவி ரேகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, ரேகா தனது குடும்பத்தினரை அழைத்ததாகவும், வீட்டிற்கு வந்த அவரது இரண்டு சகோதரர்கள், சகோதரி மற்றும் அவரது தந்தை உள்ளிட்டோர் வினய் குப்தாவைத் தாக்கியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தாக்குதலைத் தடுக்க வினயின் தாயார் முயன்றபோதும், தாக்குதல் தொடர்ந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தாக்குதலில் படுகாயமடைந்த வினயை அயலவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வினயின் குடும்பத்தினர், அவரது மனைவியின் உறவினர்கள் அவரைக் கழுத்தை நெரித்தும் மார்பில் தாக்கியும் இருந்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட வினய் மற்றும் ரேகாவுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ரேகா, அவரது இரண்டு சகோதரர்கள், சகோதரி மற்றும் அவரது தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், காவல்துறை விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
