Main Menu

திருமண வைபவங்களில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் – இராணுவ தளபதி

மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கடுமையாகக் கண்காணிக்கப்படும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலை அடுத்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அத்தியாவசிய மற்றும் சுகாதார ஊழியர்களைத் தவிர வேறு யாரும் எல்லைகளைக் கடக்க அனுமதி வழங்கப்படாது என்றும் குறிப்பிட்டார்.

அத்தோடு திருமண வைபவங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை 150 இல் இருந்து 50 ஆக மட்டுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கு மேலதிகமாக சுகாதார அமைச்சு புதிய சுகாதார வழிகாட்டுதல்களை இன்று பிற்பகல் வெளியிடும் என்றும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இருப்பினும் நாட்டை முடக்கவோ அல்லது நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தோ இதுவரை முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பகிரவும்...