Main Menu

தடைகளையும் மீறி ஏவுகணைச் சோதனைகளை நடத்தும் ஈரான் – ஐரோப்பிய நாடுகள் ஐ.நா.வுக்கு கடிதம்

ஈரான் அணுவாயுத ஒப்பந்தத்தை மீறி அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைச் சோதனைகளை நடத்துகிறது என ஜேர்மன், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் ஐக்கிய நாடுகள் சபைக்குக் கடிதம் எழுதியுள்ளன.

ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் ஈரானின் அண்மைய செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வந்தன.

இந்நிலையில் இதுகுறித்துக் கூட்டாக ஐக்கிய நாடுகள் சபைக்கு குறித்த நாடுகள் கடிதம் ஒன்றை நேற்று (வியாழக்கிழமை) அனுப்பியுள்ளன.

குறித்த கடிதத்தில், “அணுவாயுத ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி ஈரான் அணுசக்தித் திறன் கொண்ட ஏவுகணைச் சோதனைகளை நடத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாட் ஷரீஃப் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், இந்தத் தகவல் பொய்யானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ், பிரித்தானியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015இல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வத் தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் குறித்த ஒப்பந்தம் நீக்கப்பட்டது. இந்நிலையில் ஈரான் மீது இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பகிரவும்...