Main Menu

சாவிலும் ஒன்றுபட முடியாத சமூகம்? முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒற்றுமையாக ஒரு நிகழ்வாக நடத்தமுடியாமை பற்றி சொல்கிறார்கள் – மு.தமிழ்ச்செல்வன்

கடந்த மே 18 ஆம்  திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் எனும் இறுதி யுத்தம் மிக கொடுரமாக இடம்பெற்ற இடத்தில் மாத்திரம் நான்கு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது. ஆதாவது வடக்கு மாகாண சபை, கஜேந்திரகுமாரின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி, அருட்தந்தை ஒருவர் என நான்கு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.
எனவே தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் அழிவுநாளைக் கூட ஒற்றுமையாக ஒரு நிகழ்வாக நடத்த முடியாமை பற்றி  அரசியல்வாதிகள் சிலரிடம் கருத்து கேட்ட போது

முதலமைச்சர் வடக்கு மாகாண சபை

ஒருவேளை எங்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெறாத காரணத்தினால்  இருக்கலாம் அடுத்தவருடம் எப்படியாவது இவர்கள் எல்லோரையும் சேர்த்து ஒரு கூட்டத்திற்குள் கொண்டுவர பார்க்கிறன். இதில் யாருடைய பலவீனமும் இல்லை  புரிந்துணர்வு மற்றும் பேச்சுவார்த்தை நடத்தாதப்படியால் ஆதாவது முன்னரே எங்களுக்கு சொல்லியிருந்தால் நாங்கள் எல்லோருடனும் கதைச்சு ஏதாவது செய்திருக்கலாம் நாங்கள்  தனித்துவமாக இவற்றைப் பற்றி நினைக்கிறதாலதான் இப்படிப்பட்ட விடயங்கள்  நடக்கின்றது. அடுத்தவருடம் நாங்கள் எல்லோருடனும் பேசி ஒரேயொரு நிகழ்வாக நடத்தப்பார்க்கின்றோம்.

இரா. சம்மந்தன் எதிர்க்கட்சி தலைவர்

இது பொது மக்களுக்கு மிக மிக முக்கியமான விடயம் பொது மக்களின் உணர்வுகளை நாங்கள் கட்சிகளோ அரசியல்வாதிகளோ அல்லது சமூகத்தை வழநடத்தக் கூடியவர்களோ ஒற்றுமையாக ஒருமித்து செயற்பட வேண்டும். அது அத்தியாவசியம் அவ்விதமாக செயற்படுவதற்கு  எல்லோரும் முயற்சிக்க வேண்டும். நாங்கள் பிரிந்து செயற்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயம் அல்ல அது மக்களுடைய பலத்தை குறைக்கிறது. மக்களுடைய பலம் அதிகரிக்க வேண்டுமாக இருந்தால் மக்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டுமாக இருந்தால் மக்கள் சார்பில் போராட்ங்களை நடத்துகின்றவர்கள் ஒருமித்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும் நாங்கள் ஒருபோதும் குழப்பமாட்டோம். அதை எல்லோரும் பின்பற்ற வேண்டும் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம்

 

மாவை சேனாதிராஜா பா.உ

மே 18 இல் முள்ளிவாய்க்கால்  இறுதி போரில்  பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட இடம் என்பதாலும் எங்கள் மக்கள் இந்த நாளை நினைவு கூறுவது ஒரு வரலாற்று பதிவாக இருக்கின்றது. உலகத்தில் இப்படிதான் பலர் நினைவு கூர்ந்து வருகின்றார்கள். இந்த நிகழ்ச்சியை நாம் எல்லோரும் அழைத்தது போல் எல்லோரும் ஒரே நாளில் ஒரே இடத்தில் நினைவஞ்சலியை செலுத்த வேண்டிய வாய்ப்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் எல்லோரும் விரும்பினாலும் மக்களுடைய எண்ணம் அல்லது அந்தந்த பிரதேசங்களில் இருக்கின்ற மக்கள் பிரிந்து நின்று நினைவஞ்சலியை செலுத்துவது பாதிப்பை எங்களுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எவ்வாறெனினும்  மக்கள் இந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வந்து சுடரேற்றி தங்களின் அஞ்சலியை செலுத்துகின்ற நேரத்தில் எல்லோரும் தங்களின் உடன் பிறப்புகளுக்காக இறந்த அந்த மக்களுக்காக அவர்களின் சாந்திக்காக இங்கு எல்லோரும் ஒற்றுமையாக பிரார்த்திக்க வேண்டும் என்ற வேண்டுகோளைதான் நாங்கள் இந்த சந்தர்ப்பத்திலும் விடுகின்றோம். வரும் காலத்தில் இவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து இதே இடத்தில் எல்லோரும் தங்களின் நினைவஞ்சலியை செலுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்.

குருகுலராஜா கல்வி அமைச்சர் வடக்கு


2009 ஆம் ஆண்டுக்கு பிறகு வடக்கு மாகாண சபை உருவாக்கம்  பெறும் மட்டும் முள்ளிவாய்க்காலை கொண்டாட வேண்டும் என்று ஒருத்தரும் பெரிசா யோசிக்கவில்லை யோசிக்க முடியவில்லை அதற்கான தருணம் கிடைக்கவில்லை ஆனால் இப்ப அதற்கான தருணம் கிடைத்திருக்கிறது. எனவே ஒவ்வொன்று ஒவ்வொன்றாகதான் அணுக வேண்டும் இப்ப சென்ற முறையைவிடவும் நிறைய மக்கள் வந்திருக்கின்றார்கள் பல இடங்களிலும் இருந்து வந்;திருக்கின்றார்கள். அடுத்த வருடம் இந்த இடத்தில் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக செயற்படுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு அதற்கான ஒழுங்கமைப்பை நாங்கள் முன் கூட்டியே செய்ய வேண்டும். அதனை வடக்கு மாகாண சபை செய்வதற்கு நாங்கள் தீர்மானிக்க வேண்டும். முதலமைச்சர் ஒரு வாரத்திற்கு முன்னரே தன்னுடைய செய்தியை அறிவித்திருந்தார் எனவே அதற்கு ஊடாக மக்களுக்கு விளங்கியிருக்க வேண்டும் ஏற்கனவே இப்படியொரு ஒழுங்கமைப்பு இருக்கிறது அதனுடன் சேர்ந்து நாங்கள் செய்யவேண்டும் என்று உணர்ந்திருக்க வேண்டும் ஒவ்வொரும் தங்கள் தங்கள் ஊர்களில்  ஏதாவது செய்யப் போனால் அதில் ஒரு பிழையும் இல்லையே? எனவே தனித்துவமாக செய்வதனால் பிழைகள் ஒன்றும் இல்லை ஆனால் இது தொடர்பில் ஒன்று கூடுகின்ற போது அது பலத்த அர்தத்தை கொடுக்கும்.

ஜங்கரநேன் விவசாய அமைச்சர் வடக்கு


முள்ளிவாய்க்கால் பேரழிவு என்பது ஒட்டுமொத்த தமிழினத்தினதும் துயரநாள் ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்பட்டது என்று சொன்னாலும் கூட ஆயுதப் போராட்டத்தின் அந்த முடிவுதான் எங்களை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லக் கூடிய திறவு கோல்.அந்த திறவு கோலை என்னைப் பொறுத்தவரை துரதிஸ்டவசமாக சரியானமுறையில் பயன்படுத்தப்படவில்லை என்றுதான் நான் சொல்லுவேன். இது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சொந்தமான நிகழ்வு அல்ல ஒட்டுமொத்தமாக உலகத்தில் வாழ்கின்ற  தமிழ் மக்கள் அனைவருக்குமான ஒரு துயரநாள் அதேநேரம் இந்த துயரநாள்தான் எங்களின் அடுத்தக் கட்டத்திற்கான தொடக்க நாளும் இதனை அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களின் வளர்ச்சிக்காவும் தங்களுடைய பிரபல்யத்திற்காகவும் பயன்படுத்த முனைகின்றதனால்  உண்மையில் இந்த நிகழ்வில் அதிகளவு  இதைவிட அதிகமானவர்கள் வந்திருக்க வேண்டும் வராமைக்கு அதுவும்  ஒரு காரணம். அடுத்த முறையாவது முதலமைச்சர் குறிப்பிட்டது போன்று சாதி சமய பேத வர்க்க கட்சி பேதங்கள் கடந்து எல்லோரும் ஒன்றாக சேர்ந்து நிற்பதற்கான சூழல் உருவாக வேண்டும். இந்த நினைவேந்தல் இதைவிட மிக சிறப்பாக நடந்திருக்கவேண்டும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருக்க வேண்டும் ஆனால் அது இடம்பெறவில்லை ஒற்றுமையின்மையே இதற்கு காரணம். ஒற்றுமையின்மை என்பதை விட ஒவ்வொருவரும் தாங்கள் தாங்கள் பிரபல்யம் அடைய வேண்டும் என்பதே இதற்கு காரணம்.

சத்தியலிங்கம் சுகாதார அமைச்சர் வடக்கு மாகாணம்


உயிர்நீத்த  ஆன்மாக்களுக்கு ஏற்பாடு செய்த நிகழ்வை சில சக்திகள் வேண்டுமென்றே திட்டமிட்டு குழப்பியிருக்கின்றனர் எனறே நான் கருதுகிறேன். அவர்கள் யார்  அவர்களின் பின்னணி என்ன என்ற விடயங்களை நாம் அறிந்துள்ளோம், மக்களும் அவர்களை அறிந்துள்ளனர் உண்மையில் இந்த நிகழ்வை கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் சிரமத்திற்கு மத்தியில் ஏற்பாடு செய்துவருகின்றோம். இந்த முறை அஞ்சலி செலுத்துவதற்கான எமது உரிமை பாரியளவில் தடுக்கப்படாத நிலையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து அந்த உறவுகளுக்கு அஞ்சலி  செலுத்துவதற்கே தீர்மானித்திருந்தோம். மேலும் இந்த முள்ளிவாய்க்கால் திடலை நாம் உறவுகளுக்கு அஞ்சலி  செலுத்துவதற்கான உரித்துடைய இடமாக கடந்த சில நாட்களுக்கு முன்னரே பெறமுடிந்துள்ளது. இந்த இடத்தில் நிரந்தரமாக நினைவாலயம் ஒன்றை அமைப்பதற்கும் திட்டமிட்டிருக்கின்றோம் ஆனால் சில தீய சக்திகள் அதனை குழப்பிவிட்டன. எனினும் எமது மக்களுக்காக வருடாவருடம் ஏற்பாடாகும் இந்த உன்னத அஞ்சலி நிகழ்வு தொடரும்.

செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் தலைவர்


அது எங்களுடைய துர்ப்பாக்கிய நிலை மாவீரர் நாள் கூட இரண்டு மூன்று என்று பிரிந்து நடக்கிறது வெளிநாட்டில் இங்கதான் போனவருடம் மாவீரர் நாளை கூட ஒற்றுமையாக  ஒன்றாக எல்லா இடங்களிலும் வடிவாக செய்தனாங்கள்.இந்த நிகழ்வு ஒரு புனிதமான நிகழ்வு ஆளுக்காள் முண்டியடித்துக்கொண்டு இந்த நிகழ்வை செய்ய நினைப்பது இறந்த மக்களுக்கு நாங்கள் செய்யும் துரோகம் அடுத்தமுறை வருகின்ற நிகழ்வை நாங்கள் ஒன்றாக செய்ய வேண்டும் ஒன்றாக சேர்ந்து செயற்பட்டால்தான் இறந்து ஆத்மாக்கள் சாந்தியடையும் எங்களது இனத்தின் இலட்சியங்கள் நிறைவேறும்.

சித்தார்த்தன் பா.உ.


உயிர்நீத்த ஆன்மாக்களுக்காவே நாம் அஞ்சலியை செய்கின்றோம் இதில் தனித்தனியாக என்ற பிரிவுகள் அவசியமற்றவை.அவ்வாறான நிலைமைகள் காணப்படுகின்றமை மிகவும் கவலைக்குரியது. இதுவொரு அஞ்சலி நிகழ்வாகும் அரசியல் ஆதாயம் தேடும் இடமல்ல இந்த நிகழ்வை அரசியல் சாயமற்ற ஒரு நிகழ்வாக ஏற்பாடு செய்வதுதான் பொருத்தமானதாக இருக்கும்.ஆகவே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதற்காக சிவில் மற்றும் அனைத்து தரப்புக்களையும் சார்ந்த ஒரு ஏற்பாட்டுக்குழுவை அமைத்து அதனூடாக உயிர்நீத்த எமது உறவுகளுக்கான நிகழ்வாக மட்டும் முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகிறது

சரவணபவன் பா.உ.


உண்மையாகவே இது மிகவும் கவலையான விடயம் ஏன்னென்றால் அவ்வளவு பேரும் தமிழ் மக்களுக்காதான் தங்களை அர்ப்பணித்தார்கள் அந்த வகையில் இந்த இடத்தில் கட்சி பேதமின்றி சகலரும் ஒற்றுமையாக நின்றிருக்கவேண்டும். இன்றைக்கு பாருங்கள் மோடி வருகைக்காக மலையகத்தில் எதிரும் புதிருமாக நின்ற கட்சிகள் ஒன்றாக நின்றார்கள் அதனால் மக்களும் வெள்ளமாக திரண்டார்கள். அதேமாதிரி நாங்களும் ஒன்றாக நின்றிருக்க வேண்டும் ஆனால் எந்த விசயத்தையும் நாங்கள் ஒன்றாக செய்தது இல்லை இதுதான் அடிப்படை. எங்களுடைய விடயங்கள் இந்தளவுக்கு பின்னடைவுக்கு செல்வதற்கு காரணம் இதுதான். நாங்கள் ஒற்றுமையாக நின்றால் பெரும்பான்மையினமும், சிங்கள் பேரினவாதிகளும் பயப்படுவார்கள். அந்த இடத்தை நாங்கள் இன்னும் உருவாக்கவில்லை. அதை உருவாக்க வேண்டும் வடக்;குமாகாண முதலமைச்சர் சொல்லியிருக்கின்றார் கட்சி பேதமின்றி அனைவரையும் வரசொல்லி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எல்லோரும் வந்திருந்தார்கள். இதுவொரு கட்சி அரசியல் இலாபம் தேடும் இடமல்ல உணர்வுபூர்வமாக சிந்தித்தால் அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும்  ஒன்றாகதான்  வந்திருக்க வேண்டும். இதை வைத்து பார்த்தால் நாங்கள் ஒற்றுமையாக ஒன்றை அடைவோமாக என்று பார்த்தால் அதுவும் கேள்விக்குறியாகதான் இருக்கிறது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியை பொறுத்தவரை அவர்கள் எதை எடுத்தாலும் தனியாக செல்வது எதற்கும் எதிர்ப்புத் தெரிவிப்பது எல்லாவற்றையும் குழப்புவது  ஒன்றுக்கும் இணங்கிபோகாமல் செல்வது வழக்கமாகிவிட்டது இது இப்படியே போனால் இனி வரும் சமூதாயமும் இதையே பின்பற்றப்போகிறது. இது தொடர்ந்தால் நாங்கள் அறுபது வருடமல்ல அறுநூறு வருடங்கள் சென்றாலும் எதையும் அடையப்போவதில்லை.

ரவிகரன் வடக்கு மாகாண சபை உறுப்பினர்


மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் நிகழ்வு நடைப்பெற்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது தேசியக் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பது எல்லோருக்கும் தெரியும். அதன் கீழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன்தான் வடக்கு மாகாண சபை தெரிவு செய்யப்பட்டது. அந்த வடக்கு மாகாண சபையின் ஊடாக நாங்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் எந்த ஏற்பாடுகளை செய்து வருகின்றோம் இதை குழப்ப வேண்டும் என்ற நோக்கதோடோ என்னவோ ஆங்காங்க வேறு சிலர் நிகழ்வை செய்தது பொருத்தமற்றது. வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதலமைச்சர் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தார் ஆதாவது இன அழிப்பு தீர்மானத்தை கொண்டுவந்து ஜநா சபை வரை கொண்டு செல்லப்பட்டது இவ்வளவு தகுதிகளுமே வடக்கு மாகாண சபை நடத்துவதற்கு போதுமானது என எண்ணுகின்றேன். எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் ஓரே குரலில் ஒரே தளத்தில் எங்களுடைய அஞ்சலிகளை செலுத்துவதுதான் சாலச்சிறந்தது இது மக்களுக்கான நிகழ்வு  தனியே அரசியல் கட்சிகளுக்கானது அல்ல.

சிவிகே. சிவஞானம் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர்


இது எங்களுடைய இனத்தின் இயல்பு குணம். ஒற்றுமை என்பது எப்பொழுதும் இல்லை 1916 இலும் இல்லை 2017 இலும் இல்லை இதுதான் சுபாவம் இது துரதிஸ்டவசமானது. வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில்தான் இது நடந்தது மகிந்த ராஜபக்ஸ இருந்த 2014 இலும் நாங்கள்தான் செய்தோம்.இதில் கட்சி பேதங்கள் ஒன்றும் கிடையாது. வடக்கு மாகாண சபை என்பது கட்சி பேதங்கள் அற்ற ஒரு சபை அங்கு எல்லோரும் ஒற்றுமையாக இருக்கின்ற ஒரு மாகாண சபை. மாகாண சபை முறைமை என்பது இன்றைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்;ட ஒரு விடயம் இன்றைக்கு எனவே அதில் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக செய்யாதது கவலைக்குரிய விடயம்.

சுரேஸ் பிறேமச்சந்திரன் முன்னாள் பா.உ.


இது உண்மையாகவே  மனவருத்தப்படக் கூடிய ஒரு விடயம் இறந்துபோனவர்கள் எல்லோரும் தமிழ் மக்களுக்காக போராடியவர்களும், பொது மக்களும் ஆகவே அவர்களை நினைவு கூறவேண்டியது தமிழ் மக்கள் ஒவ்வொரும் செய்யவேண்டிய செயற்பாடு இங்கு பிரிந்து நின்று வேறு வேறு மூளைகளில் நின்று தீபம் ஏற்றுவதோ நினைவு கூறுவதோ சரியான நடைமுறையாக இருக்காது. ஆரம்பத்திலிருந்தே நாங்கள் இதனை ஒரு நிகழ்வாக நடத்தவேண்டும் என்று கேட்டிருகின்றோம். ஆனாலும் கூட விரும்பியோ விரும்பாமலோ பலக் குழுக்களாக பிரிந்திருந்து நிகழ்வை நடத்துவதை பார்க்க கூடியதாக இருக்கிறது. இன்று நானும் அறிகிறேன் நான்கு ஜந்து அணிகளாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. அது அவ்வளவு ஆரோக்கியமான விடயமல்ல குறைந்தப் பட்சம் அடுத்த ஆண்டிலிருந்தாவது நினைவேந்தல் நிகழ்வை ஒரு பொது நிகழ்வாக தமிழ் மக்கள் எல்லோரும் இணைந்து நடத்தும் ஒரு நிகழ்வாக மாகாண சபையோ அல்லது நினைவேந்தல் நிகழ்வை நடத்தும்  ஒரு பொது அமைப்பை உருவாக்கியோ இந்த நினைவேந்தல் நிகழ்வை நடாத்த வேண்டும் அதுதான் தமிழ் மக்களுக்கு சிறப்பாக இருக்கும்.இறந்து போனவர்கள கௌரவிப்பதாகவும் இருக்கும்

தவராசா  வடக்கு மாகாண எதிர்கட்சி தலைவர்


முள்ளிவாய்க்காலில் தங்களின் உயிர்களை பலிகொடுத்தவர்களை நினைவு கூறும் இந்த நிகழ்வை கூட தமிழ் மக்கள் ஒருமித்து ஒரே குரலில் அல்லது ஒருமித்த ஒரு நிகழ்வாக நடத்த முடியாமல் அரசியல்  நோக்கங்களுக்காக ஒவ்வொருவரும் பிரிந்து நின்று நடத்துவது கவலைக்குகரிய விடயம். இறந்த மக்களுக்கு உண்மையாக அவர்களது ஆத்மா சாந்தியடைய வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்கள் செய்ய வேண்டிய முதலாவது விடயம் எல்லோரும் ஒருமித்து இந்த அஞ்சலியை அவர்களுக்கு செலுத்த வேண்டும்

சார்ல்ஸ் நிர்மலநாதன் பா.உ


எனக்கு தெரியாது இந்த நிகழ்வை ஒழுங்குப்படுத்தினவர்களிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும் எனக்கு முள்ளிவாய்க்காலில் வேறு நினைவேந்தல் நிகழ்வு நடப்பது தெரியாது யார் யார் செய்கிறார்கள் என்று தெரியாது ஒருசிலர் செய்யிறது பற்றி எனக்கு தெரியாது; அவர்கள் செய்வது பற்றி சொல்லவேண்டிய தேவையும் எனக்கு இல்லை.

சிவசக்தி ஆனந்தன் பா.உ


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை கூட ஒன்றாக செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.  இங்கு நான்கு ஜந்து இடங்களில் கூட  இறந்த மக்களுக்காக அஞ்சலி செய்யகின்ற துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. உண்மையில் எதிர்காலத்திலாவது கட்சி பேதங்களை விட்டு எல்லோரும் ஒன்றுபட்டு இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் முள்ளிவாய்க்கால் நிகழ்வை நடத்த ஒரு பொது அமைப்பாக தாபன மயப்படுத்தப்பட்டு வருடம் தோறும் நடக்கின்ற இந்த தினங்களை அனுஸ்டிக்க வேண்டும் இதற்காக பதிவுசெய்யப்பட்ட ஒரு பொது அமைப்பை உருவாக்க வேண்டும் முதலமைச்சர்  அவர்கள் அதனை மேற்கொள்ள வேண்டும் என்றும்.

சிறிதரன் பா.உ


இது தொடர்பில் நான் கருத்து தெரிவிப்பதற்கு எதுவும் இல்லை கட்சியின் தலைவர்  சம்மந்தன்  சொன்னால் சரி அதுவே என்னுடைய கருத்தும் எனவே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை

சிவாஜிலிங்கம் வடக்கு மாகாண சபை உறுப்பினர்


இது தமிழர்களிடையே இருக்க கூடிய ஒரு சாபக்கேடு இது தமிழர்களின் தேசிய துக்கநாள் இது ஒரு செத்தவீடு கலியாணவீடுகளில் நாங்கள் பிரிந்து நின்று வேறுவேறாக நிகழ்ச்சிகளை மேடைகளை அமைக்கலாம். ஆனால் இந்த தேசிய துக்கநாளில் எதிர்வரும் காலங்களிலாவது எல்லோரும் ஒற்றுமையாக ஓரே இடத்தில் கட்சி மத பிரதேச வேறுபாடுகளை மறந்து  அனுஸ்டிக்கின்ற நிலைமை உருவாகினால்தான் தமிழர்களுக்கு  எதிர்காலம் உண்டு வாழ்வுண்டு  ஓரு வாரம் என்று இருக்கின்ற போது நீங்கள் தனித்தனியாக பிரிந்து நின்று சிறு நிகழ்வுகளான செய்து கடைசி ஒரே இடத்தில் அத்தனை பேரும்  செய்யக் கூடிய விதத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதில் கட்சி தலைவர்கள் உட்பட சம்மந்தப்பட்டவர்கள்  சமூக அமைப்புக்கள் மத அமைப்புக்கள்  மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எதிர்காலத்தில் ஒரே இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து நடத்துகின்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும்

அனந்தி சசிதரன் வடக்கு மாகாண சபை உறுப்பினர்

இந்த முள்ளிவாய்க்கால் துன்பத்தை சந்தித்தவள் என்ற வகையில் நாங்கள் சாவிலும் கூட ஒன்று பட முடியாதவர்களாகதான் இருக்கின்றோம் இந்து முள்ளிவாய்க்கால் அவலத்திற்குள் இருந்து ஓடிக்கொண்டிருக்கும் போது சாதி சமய மத பேதங்கள் பார்க்கவில்லை அவற்றுக்குள்ளிருந்துதான் நாங்கள் தப்பினோம். ஆனால் இன்றைக்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட வகையில் எல்லாவற்றையும் சின்னாபின்னமாக சிதறடிச்சு அவர்கள் நினைச்ச மாதிரியான நிகழ்வுகளை செய்யினம். இது தொடர்பில் சில தவறுகள் எங்களிடம் இருக்கிறது. வடக்கு மாகாண சபையின் நிகழ்வாக ஒன்றுபடுத்தியிருந்தாலும் கூட அனைத்து கட்சியினருடனும், சிவில் அமைப்புகளுடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தையை நடத்தி எல்லோரையும் ஒன்றுபடுத்தி கொண்டு வந்திருக்க வேண்டும் ஆனால் அதனை முதல்வர் தவறவிட்டுள்ளார் நிச்சயம் பேசியிருந்தால் அவர்களும் ஒரு உடன்பாட்டிற்கு வந்திருப்பார்கள். இவ்வாறு ஒற்றுமையாக செய்ய முடியாத நிலைமையை  சாவிலும் கூட ஒன்றுபடாத இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சி அடைகிற வகையில் செய்திருகின்றோம் என்பது கவலையே. ஆனால் காலப்போக்கில் நாங்கள் முள்ளிவாய்க்கால் நிகழ்வையாவது ஒற்றுமையாக செய்யக் கூடிய சூழலை உருவாக்க வேண்;டும்

மாகாண சபை உறுப்பினர் ஒருவர்

இன்று முள்ளிவாய்;க்கால் நினைவேந்தல் அஞ்சலிக்காக நாங்கள் எலலோரும் ஒன்று கூடியிருகின்றோம். இது வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முதலமைச்சரின் வழிகாட்டலில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. எல்லோரும் ஒற்றுமையாக இனமத பேதங்கள் இன்றி கலந்துகொள்ளுமாறு முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார் இருந்தும் பல பிரிவுகளாக இந்த நிகழ்வு நடந்துகொண்டிருக்கிறது இது மிகவும் வருந்ததக்க விடயம். இனிவரும் காலங்களிலாவது எல்லோரும் ஒற்றுமையாக இந்த நிகழ்வை நடத்த வேண்டும் அத்தோடு எல்லோரும் தங்களின் அரசியல் இலாபங்களை இந்த நிகழ்வில் காட்டக்கூடாது இது இன அழிப்பு சம்மந்தப்பட்ட விடயம் எனவே இனிவரும் காலங்களில் எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்துத் தெரிவிக்கையில், மாகாண சபையானது தமிழ் மக்களின் அரசியலை முடக்குவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட ஒரு அமைப்பெனவும், அதனை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லையெனவும், அதன் காரணமாகவே சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகளை அழிப்பதாகக் கூறி ஒரு இனத்தையே அழித்தது.

அந்த அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொள்ளவில்லையெனவும், தற்போது தமிழ்மக்களின் நம்பிக்கைக்குரிய அமைப்பாக தமிழ் மக்கள் பேரவை உள்ளதாகவும், அதன்மூலம் இந்நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தால் தாமும் இணைந்து இந்நிகழ்வில் கலந்துகொண்டிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...