கொரோனாவிற்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசி பெப்ரவரியில் கிடைக்கும் – விஞ்ஞானிகள் நம்பிக்கை!
கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசி அடுத்தாண்டு பெப்ரவரி மாதத்தில் கிடைக்கும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி பல நாடுகளில் நடந்து வருகின்றது. அதில் பெரும்பாலானவை இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளன.
மத்திய அரசின் ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முயற்சியில் ‘கோவாக்சின்’ என்ற தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகிறது. இதனை ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதன் இறுதி கட்டப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த விஞ்ஞானி ரஜினிகாந்த் முதல் இரண்டு கட்டப் பரிசோதனைகளில் இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது, பலனளிக்கக் கூடியது என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த மருந்து அடுத்தாண்டின் மத்திய பகுதியில் தான் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் பெப்ரவரியில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.