குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்த தயாரா? – காங்கிரஸ் கேள்வி!
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த தயாரா என பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் கட்சி சவால் விடுத்துள்ளது.
கவுகாத்தியில் அசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். இதன்போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு இருப்பதாக பா.ஜனதா உண்மையிலேயே நம்பினால் அந்த சட்டம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த தயாரா?
2021ஆம் ஆண்டு அசாம் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் 100 தொகுதிகளை கைப்பற்றப் போவதாக மாநில பா.ஜனதா தலைவர் கூறுகிறார். ஆனால் அது நடக்காது” என தெரிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்ற நிலையில், மேற்படி சவால் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.