எஸ்ஸெக்ஸ் சம்பவம்- கொள்கலன் லொறியை செலுத்தி வந்த சாரதி மீது வழக்குப்பதிவு
இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் பிராந்தியத்தில் கொள்கலன் லொறி ஒன்றில் இருந்து 39 சடலங்களை பொலிஸார் கைபற்றிய சம்பவத்தில், லொரியின் சாரதி மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
25 வயதாகும் மரிஸ் ரொபின்சன் என்னும் அந்த சாரதி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆட்கடத்தல், கறுப்புப்பண பறிமாற்றம் ஆகிய குற்றங்களுக்காக வழக்கு பதியப்பட்டுள்ளது.
நாளை (திங்கட்கிழமை) அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கொலை மற்றும் ஆட்கடத்தல் ஆகிய சந்தேகங்களின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இறந்தவர்கள் அனைவரும் சீனப் பிரஜைகள் எனச் சந்தேகிக்கப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்தோரின் அடையாளங்களை வியட்நாம் நாட்டு மக்கள் வாழும் பகுதியில் தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் வாழும் வியட்நாமை சேர்ந்த மக்களின் அமைப்பான ‘வியட்ஹோம்’, காணவில்லை என்ற பட்டியலில் இதுவரை தங்களிடம் 20 புகைப்படங்கள் வந்துள்ளதாக தெரிவிக்கிறது.