Main Menu

ஆசனப்பட்டி அணியாமல் காரில் சென்ற வீடியோ- இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டார்

இங்கிலாந்து நாட்டில் காரில் ஆசனப்பட்டி அணியாமல் செல்பவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது. அதை கட்ட தவறியவர்கள் கோர்ட்டு மூலம் அதிக அபராதம் செலுத்த நேரிடும். இந்த சூழ்நிலையில் அந்தநாட்டு பிரதமரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் 100-க்கு மேற்பட்ட புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரபடுத்துவதற்காக வடமேற்கு இங்கிலாந்தில் வீடியோ எடுக்கப்பட்டது. அந்த வீடியோவில் ரிஷி சுனக் காரில் பயணித்தப்படி கேமிராவை பார்த்து பேசுவது போன்று இருந்தது. அவரது காரின் முன்னும் பின்னும் போலீசார் மோட்டார் சைக்கிளில் பாதுகாப்புக்காக சென்றனர். இதில் பிரதமர் ரிஷிசுனக் காரில் ஆசனப்பட்டி அணியாமல் சென்றார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த செயலுக்கு ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டு உள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். ஒரு சிறிய கிளிப்பை படமாக்க பிரதமர் தனது சீட் பெல்ட்டை கழற்றினார். இது தவறு என்பதை அவர் முழுமையாக ஏற்றுக்கொண்டு அதற்காக மன்னிப்பு கேட்டு உள்ளதாக அவர் கூறினார். மேலும் காரில் செல்லும் போது அனைவரும் ஆசனப்பட்டி கட்டாயம் அணிய வேண்டும் என பிரதமர் நம்புவதாக அவர் தெரிவித்து உள்ளார்.

பகிரவும்...