Main Menu

சர்வதேச புவி நாள் : பூமியின் வளங்களை பாதுகாப்போம்!

1969-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் (John McConnell). அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார். அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது.

அதே சமயத்தில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970-ம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.

அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் (புவி [பூமி] நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஐக்கிய நாடுகள் அவை ஜூன் 5-ம் நாளன்று உலக சுற்றுச் சூழல் நாளை அனுசரித்து வருகிறது.

புவி நாள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்:

●  சுற்றுச்சூழல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ந் தேதி, புவி நாளாக அனுசரிக்கப்படுகிறது.

●  முதல் புவி நாள் ஏப்ரல், 22 1970ம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது.

●  அமெரிக்காவின் செனட்டராக இருந்த Gaylord Nelson புவி நாளை நிறுவினார்.

●  புவிநாள் முதலில் அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டது, இருப்பினும் 1990ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவலாக அனுசரிக்கப்பட்டது.

● 1970ல் அனுசரிக்கப்பட்ட முதல் புவி நாளில், 2 கோடி மக்கள் பங்கேற்றனர்.

● ஒவ்வொரு புவி நாளிலும், குப்பைகள் சேகரித்தல், மரங்கள் நடுதல்,  சுற்றுச்சூழல் பற்றி விழிப்புனர்வு ஏற்படுத்துதல் போன்றவைகள் செயல்படுத்தப்படுகிறது.

● 2009ம் ஆண்டு புவி நாளில் டிஸ்னி நிறுவனம், விலங்கினங்கள் இடம்பெயரும் பாதைகள் பற்றிய டாக்குமெட்டரி படத்தை வெளியிட்டது.

● 2009ம் ஆண்டு ஐ.நா சபை புவி நாளுக்கு, சர்வதேச தாய் பூமி தினம் (International Mother Earth Day) என்று மறுபெயரிட்டது.

● புவி நாளில் அருகிவரும் ஆர்கிட் மலர் இனங்களை காக்கும் பொருட்டு பனாமா நாட்டில் 100 ஆர்கிட் செடிகள் நடப்பட்டது.

● கார்பன் டை ஆட்சைடு வாயுவை கட்டுப்படுத்தும் விதமாக 1 லட்சம் இருசக்கர வாகனங்களில் விழிப்புனர்வு ஊர்வலம் சீனாவில் நடைபெற்றது.

● ஆண்டுதோறும் 175 நாடுகளில் புவி நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது

பகிரவும்...