Main Menu

அ.தி.மு.க.விடம் இருந்து சிறுபான்மை மக்களை பிரிக்க முடியாது – துணை முதல்வர்

அ.தி.மு.க.வையும், சிறுபான்மை மக்களையும் பிரித்து விடலாம் என்று ஸ்டாலின் மேற்கொண்டுள்ள சூழ்ச்சி ஒருபோதும் நிறைவேறாது என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

வேலூர் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலூரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், அ.தி.மு.க.வுக்கு புதியவரல்ல. இந்தக் கட்சி தொடங்கப்பட்டது முதலே இணைந்து பணியாற்றுபவர். ஆரணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் எம்.ஜி.ஆ.ரால் சென்னை மாவட்டச் செயலராக அப்போதே நியமிக்கப்பட்டவர்.

அ.தி.மு.க.வில் மட்டும்தான் ஒரு தொண்டனும் முதல்வராக, அமைச்சராக உயர் பதவிகளுக்கு வரமுடியும். 1983-இல் சாதாரண வார்டு செயலராக இருந்த நான், தற்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். முதல்வராக இருந்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி முதல்வராக உள்ளார். ஆனால், தி.மு.க. உள்பட எந்த ஒரு கட்சிகளிலும் அப்படி வரமுடியாது.

தி.மு.க.வில் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், அவருக்கு பிறகு தற்போது உதயநிதி ஸ்டாலின் வந்துவிட்டார். அந்த வகையில், அ.தி.மு.க. மட்டுமே மக்களாட்சி தத்துவத்தின்படி இயங்கிக் கொண்டுள்ளது. அதனால், இந்தக் கட்சி வீழ்ந்தாலும் எழும்.

ஆனால், ஸ்டாலின் உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவித்து கடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். அது தாற்காலிகமான வெற்றிதான். எனினும், தமிழகத்தை ஆளும் பொறுப்பை மக்கள் அதிமுகவுக்குத்தான் அளித்துள்ளனர்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஸ்டாலின் கூறியது நடக்கவில்லை. அதனால், தற்போது அ.தி.மு.க. அரசில் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 28 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறிக்கொண்டுள்ளார்.

ஸ்டாலின் எப்படியும் தமிழக முதல்வராக வேண்டும் என்று பகல் கனவு கண்டு கொண்டுள்ளார். அது எந்தக் காலத்திலும் நடக்காது. இதுதான் மக்கள் தீர்ப்பாகும். திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டும், சட்டம்-ஒழுங்கும் சீர்கெட்டு இருந்தது. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக மாறியுள்ளது.

இந்த அரசு சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அளிக்கும் அரசாக விளங்கிக் கொண்டுள்ளது. எனவே அ.தி.மு.க.வையும், சிறுபான்மை மக்களையும் பிரித்துவிடலாம் என்று ஸ்டாலின் மேற்கொண்டுள்ள சூழ்ச்சி ஒருபோதும் நிறைவேறாது” என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

பகிரவும்...