Main Menu

அரசியலில் எந்த நடிகரும் வெற்றி பெற முடியாது- கே.எஸ்.அழகிரி

அரசியலில் எந்த நடிகரும் வெற்றி பெற முடியாதென தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கே.எஸ்.அழகிரி மேலும் கூறியுள்ளதாவது, “பா.ஜ.க ஆட்சியில் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

பொருளாதாரத்தை பற்றி நரேந்திர மோடிக்கோ,  சுப்பிரமணிய சுவாமிக்கோ சரிவர தெரியவில்லை. வேண்டுமானால் மன்மோகன்சிங், சிதம்பரம் போன்ற பொருளாதார நிபுணர்களுடன் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் உள்ளூராட்சி தேர்தலை திட்டமிட்டு நடத்தாமல்  அ.தி.மு.க.வே இருந்து வந்ததுடன் தற்போது பல்வேறு சதி வேலைகளையும் செய்து வருகிறது. மாநில தேர்தல் ஆணையகமும் நம்பிக்கையுடன் செயல்படவில்லை. 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளூராட்சி தேர்தல் நடத்துவது ஏற்புடையது அல்ல.

இதுபோன்ற வேலைகளை செய்து உள்ளூராட்சி தேர்தல் தள்ளி போவதற்கு அ.தி.மு.க. அரசு திட்டமிட்டு சதி செய்கிறது. தலைவர் பதவி இடங்களுக்கு மறைமுக தேர்தல் நடத்த கூடாது. இதன் மூலம் பணபலம் மிக்கவர்கள் தேர்வு செய்யப்பட்டு தவறான செயற்பாடுகள் நடைபெறும். மக்கள் சேவையாற்ற நினைக்கும் ஏழை, எளியவர்களை தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்படும்.

எம்.ஜி.ஆருக்கு பின்னர் இனி எந்த ஒரு நடிகரும் அரசியலில் வெற்றி பெற முடியாது. ரஜினி 1995ஆம் ஆண்டில் இருந்தே அரசியலுக்கு வருவேன் என்று கூறி வருகிறார்.

ரஜினி ஒரு ஆன்மிகவாதி. ஆன்மிகத்தை தான் விரும்புவார். அரசியலை விரும்பமாட்டார். அதனால் அவர் அரசியலுக்கு வரமாட்டார்” என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...