DGCI அனுமதியளித்தால் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை ஆரம்பிக்கப்படும் – சீரம் நிறுவனம்
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையமான DGCI அனுமதியளித்தால் கொவிட் 19 க்கு எதிரான தடுப்பு மருந்து பரிசோதனையை மீண்டும் தொடரவுள்ளதாக புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் தன்னார்வலர் ஒருவர் பரிசோதனையின்போது உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, நான்கு நாடுகளில் பரிசோதனை நிறுத்தப்பட்டதை அடுத்து, இந்தியாவிலும் அந்த தடுப்பு மருந்தை தயாரிக்கும் சீரம் நிறுவனமும் பரிசோதனையை நிறுத்தியது.
இந்த நிலையில், இங்கிலாந்தில் அத்தடை நீக்கப்பட்டு மீண்டும் பரிசோதனைகள் தொடர நேற்று அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக சீரம் நிறுவனமும் பரிசோதனைகளைத் தொடர தயார் என அறிவித்துள்ளது. எனினும் இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையமான DGCI அனுமதியளிக்க வேண்டும் என அந் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.