Main Menu

மனித உரிமைகள் மீறல் அதிகரிப்பா?… அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கைக்கு இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றி தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் ’2023-ம் ஆண்டின் மனித உரிமைகள்’ அறிக்கையில் மணிப்பூர் வன்முறை மற்றும் கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை போன்ற சம்பவங்களில் இந்தியாவை முன்வைத்து மனித உரிமை மீறல்கள் அதிகரித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நீதிக்கு புறம்பான கொலைகள், பலவந்தமாக காணாமல் போதல், கடுமையான சிறைவாசம், தன்னிச்சையான கைது, நாடுகடந்த அடக்குமுறை ஆகியவை அடங்கும்.

அரசாங்க அதிகாரிகள் அல்லது கொள்கைகளை விமர்சித்ததால் பழிவாங்கல், தவறான தகவல் மூலம் தாக்குதல் மற்றும் சமூக ஊடகங்களை பிரசாரத்திற்கு சுதந்திரமாக பயன்படுத்த இயலாமை உள்ளிட்ட எதிர்கட்சிகளின் உறுப்பினர்களால் புகாரளிக்கப்பட்ட தடைகள் குறித்தும் அமெரிக்க அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் ஜூலை 8 அன்று ஊரக கவுன்சில் தேர்தலுக்கு முன்னதாக 52 பேர் கொல்லப்பட்ட தேர்தல் வன்முறையையும் அது சுட்டிக்காட்டுகிறது.

மணிப்பூரில், குறைந்தது 175 பேரின் மரணத்திற்கு வழிவகுத்த இன வன்முறையை அமெரிக்க அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வீடுகள், வணிகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை அழித்ததோடு, ஆயுத மோதல், கற்பழிப்பு மற்றும் தாக்குதல்கள் பற்றிய அமெரிக்காவின் புள்ளி விவரங்களை அமெரிக்க வெளியுறவுத்துறை மேற்கோள் காட்டுகிறது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் மணிப்பூர் உட்பட வடகிழக்கு மாநிலங்களுக்கு ஐ.நா அதிகாரிகளை அணுக வாய்ப்பில்லாது மட்டுப்படுத்தப்பட்டது எனவும் அமெரிக்க அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும் இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடத்திய சோதனைகள் குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2002 குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை குறிப்பிடுகையில், “அரசாங்கம் ஆவணப்படத்தைத் திரையிடுவதைத் தடைசெய்ய அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தியது. வீடியோவிற்கான இணைப்புகளை அகற்ற ஊடக நிறுவனங்களை கட்டாயப்படுத்தியது. இந்தியாவில் திரையிட தடை விதிக்கப்பட்டது. பொதுவெளியில் அந்த வீடியோவைக் காண ஏற்பாடு செய்த மாணவர் அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுத்தது” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், அமெரிக்காவின் இந்த அறிக்கைkகு வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ”ஆழ்ந்த பக்கச்சார்பானது மற்றும் இந்தியாவைப் பற்றிய மோசமான புரிதலை இது பிரதிபலிக்கிறது. நாங்கள் அதற்கு எந்த மதிப்பையும் கொடுக்கவில்லை” என்று அமெரிக்க அறிக்கையை பொருட்படுத்தாது இந்தியா புறக்கணித்துள்ளது.  

பகிரவும்...