சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் 27 பேர் சிக்கினர்
கடந்த ஜூன் மாதம் 16 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் உள்நாட்டு கடல் பரப்பை உள்ளடக்கியதாக கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலில் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 27 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்களிடம் இருந்த 10 டிங்கி படகுகள் மற்றும் 02 கனோய் படகுகளும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, திருகோணமலை சூடைக்குடா, சுவீட் வே, யாழ்ப்பாணம் உடுத்துறை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, சிலாபத்துறை சவாரிபுரம் ஆகிய கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கியதாக கிழக்கு, வடக்கு மற்றும் வடமேல் கடற்படைக் கட்டளைகளினால் இந்தச் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள், வணிக வெடிபொருட்கள், தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, மூதூர், யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்கள் மற்றும் மருதங்கேணி பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
