பிரான்ஸுக்கான புதிய இலங்கைத் தூதுவராக சுகீஸ்வர குணரத்ன தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்
பிரான்ஸ் குடியரசுக்கான இலங்கையின் புதிய தூதுவராகவும், யுனெஸ்கோவுக்கான (UNESCO) இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ள சுகீஸ்வர குணரத்ன, நேற்று (02) பாரிஸிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார்.
தூதரக அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றிய அவர், இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான நீண்டகால, சுமுகமான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். குறிப்பாக, வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு ஆகிய துறைகளை மேம்படுத்துவதுடன், பிரான்ஸில் வாழும் இலங்கை மக்களுக்குத் திறமையான தூதரக சேவைகளை வழங்குவதே தனது முக்கிய நோக்கம் எனக் குறிப்பிட்டார்.
கடமைகளைப் பொறுப்பேற்ற அதே நாளில், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சின் மாநில நெறிமுறை மற்றும் இராஜதந்திர நிகழ்வுகள் பிரிவின் துணை இயக்குநர் மெத்தியூ கார்மோனா, புதிய தூதுவரைச் சந்தித்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதன் போது, தூதுவர் சுகீஸ்வர குணரத்ன தனது நியமனத்திற்கான சான்றிதழின் திறந்த நகலை அவரிடம் கையளித்தார்.
இலங்கை வெளிநாட்டுச் சேவையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமிக்க சுகீஸ்வர குணரத்ன, இதற்கு முன்னர் எத்தியோப்பியாவுக்கான தூதுவராகவும், நியூயார்க்கில் உள்ள ஐநாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தரப் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
