தவெக அரசு மீது குதிரை பேர புகார்: ஆளுநரிடம் திமுக, அதிமுக மனு
குதிரை பேரத்தில் ஈடுபடும் தவெக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் அர்லேகரிடம் திமுக, அதிமுக சார்பில் மனுகொடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் தனக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில், இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றது. காங்கிரஸ் – 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) – தலா 2 மற்றும் அதிமுகவில் இருந்து 25 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அரசு வெற்றி பெற்றது.
காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் அமைச்சரவையில் பங்கேற்று, கூட்டணியிலும் இணைந்துள்ளன. அமைச்சரவை மற்றும் கூட்டணியில் இடம்பெற மறுத்துவிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக கூறிவருகின்றன. இந்த நிலையில், தவெக பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் விஜய் இருக்கிறார்.இந்த சூழலில், அதிமுகவில் இருந்து இதுவரை 6 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இதனால் தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அதிமுக குற்றம்சாட்டி வருகிறது.
