Main Menu

ஈரான் அரசின் உத்தரவின் பேரில் பத்திரிகையாளர் மீது கத்திக்குத்து தாக்குதல்

பிரிட்டனில் ஈரான் அரசை விமர்சித்து செய்தி வெளியிட்டு வந்த பத்திரிகையாளர் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட கத்திக்குத்து தாக்குதலில் தொடர்புடைய இரண்டு ருமேனியர்களுக்கு லண்டன் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ஈரான் இன்டர்நேஷனல் (Iran International) என்ற பாரசீக மொழி தொலைக்காட்சியில் பணியாற்றிய பத்திரிகையாளர் பூரியா ஜெராத்தி (Pouria Zeraati), கடந்த ஆண்டு லண்டனின் விம்பிள்டன் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே மூன்று முறை கத்தியால் குத்தப்பட்டார். இந்த தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்து சாலையோரத்தில் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நந்திடோ படேயா (21) (Nandito Badeya)  மற்றும் ஜார்ஜ் ஸ்டானா (25) (George Stana) ஆகிய இரு ருமேனியர்களும், கடுமையான உடல் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்திய குற்றத்தில் குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டனர்.

நேற்று ஓல்ட் பேலி (Old Bailey) நீதிமன்றத்தில் தீர்ப்பளித்த நீதிபதி ஜஸ்டிஸ் சீமா-கிரப், (Justice Seema-Grubb) “இந்த தாக்குதல் ஈரான் அரசின் சார்பில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் மிகவும் வலுவாக உள்ளன” என்று தெரிவித்தார்.

இந்த தாக்குதல் கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக சர்வதேச அளவில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் வாழும் எதிர்ப்புக் குரல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இவ்வழக்கு வெளிநாட்டு அரசுகளின் மறைமுக நடவடிக்கைகள் குறித்து பிரிட்டனில் பாதுகாப்பு அமைப்புகள் அதிக கவனம் செலுத்த வழிவகுத்துள்ளது.