உயர்மட்ட இந்தியத் தூதர்கள் மாநாடு ஏப்ரல் 28 முதல் 30 வரை புது டெல்லியில்
ஏனைய நாடுகளுக்கான அனைத்து உயர்மட்ட இந்தியத் தூதர்களும் கலந்துகொள்ளும் மூன்று நாள் மாநாடானது இந்த மாத இறுதியில் தலைநகர் புது டெல்லியில் நடைபெறவுள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவிவரும் நெருக்கடியும், அதன் தொலைநோக்கு புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார தாக்கங்களும், ஏப்ரல் 28 முதல் 30 வரை தேசிய தலைநகரில் நடைபெறவுள்ள தூதரகத் தலைவர்கள் மாநாட்டில் முக்கிய இடத்தைப் பெறும்.
உருவாகிவரும் உலகளாவிய சவால்கள் குறித்து விவாதிப்பதற்காக, இந்த மூன்று நாள் மாநாடு உலகம் முழுவதிலுமிருந்து இந்தியாவின் உயர்மட்டத் தூதர்களை ஒன்றிணைக்கும்.
இக்கூட்டத்தில் இந்திப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 30 அன்று உரையாற்ற உள்ளார்.
மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து, உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகச் சங்கிலிகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கியமான நேரத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
உலகின் எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் பகுதி கடந்து செல்லும் ஒரு முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள நிலைமை, இந்த மாநாட்டின் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும்.
அமெரிக்காவும் ஈரானும் நீரிணையின் மீது தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்ட முயற்சிப்பதால், கடல்வழிப் போக்குவரத்தில் கடுமையான இடையூறு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
பெப்ரவரியில் பதற்றம் அதிகரிப்பதற்கு முன்பு, தினமும் சுமார் 135 கப்பல்கள் நீரிணையைக் கடந்து சென்றன.
இருப்பினும், தற்போதைய நிலைமைகள் கப்பல் போக்குவரத்தில் பெரும் சரிவை ஏற்படுத்தி, குறிப்பாக வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் சரக்கு வர்த்தகத்தைப் பாதித்துள்ளன.
ஈரான் இந்த நீரிணையை ஒரு மூலோபாய பேரம்பேசும் சக்தியாகப் பயன்படுத்துவதாகவும், அதன் புரட்சிகர பாதுகாப்புப் படை ஒவ்வொரு கப்பலுக்கும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் சுங்க வரி விதிக்க முயல்வதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், கடல்வழிப் போக்குவரத்தைக் குறிவைக்கும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் பதிலளிக்கும் அறிவுறுத்தல்களுடன் அமெரிக்க கடற்படை அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
