Main Menu

லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் – டொனால்ட் ட்ரம்ப்

லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிராந்தியத்தில் அமைதி திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய மற்றும் லெபனான் அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் வகையில், லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து லெபனான் மக்கள் வீதிகளில் இறங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் “மிக நெருக்கத்தில்” இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்த வார இறுதியில் மீண்டும் தொடங்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லெபனானில் ஏற்பட்டுள்ள போர்நிறுத்தச் செய்தியை ஈரானிய வெளியுறவு அமைச்சகம் வரவேற்றுள்ளது.

போர்நிறுத்தம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் அதிகாரி ஒருவர், “எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுடன்” இந்த போர்நிறுத்தத்தை அணுகப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போர்நிறுத்தம் அமலுக்கு வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக, தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய கடுமையான தாக்குதல்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

சைடன் (Sidon) மாவட்டத்தில் மூவரும், ஜஹ்ரானி (Zahrani) பகுதியில் எண்மரும் கொல்லப்பட்டதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நீடித்து வரும் பதற்றத்தைத் தணிக்கச் சர்வதேச நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.