மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்த முடியும் எனத் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் தெரிவிப்பு
இலங்கையில் நீண்டகாலமாகத் தாமதமடைந்து வரும் மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் 2017ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் காரணமாக ஏற்பட்ட தொகுதி எல்லை நிர்ணயச் சிக்கல்களே இந்தத் தாமதத்திற்குப் பிரதான காரணமாகும்.
இதுவரையில் எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படாத நிலையில், தற்போது இந்த சட்டச் சிக்கல்களைத் தீர்க்க நாடாளுமன்ற விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துத் கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர், செயற்குழு தனது விதப்புரைகளை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் தேர்தல் முறையை நாடாளுமன்றம் விரைவாகத் தீர்மானித்தால் இந்த ஆண்டு தேர்தலை நடத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்த தேர்தல் முறையை இறுதி செய்வது நாடாளுமன்றத்தின் கைகளிலேயே உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க மேலும் வலியுறுத்தியுள்ளார்.
