Main Menu

மத்திய கிழக்கு நாடுகளில் பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க அழைப்பு!

பிரான்ஸ் ஜனாதிபதியின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குவைத், ஜோர்தான் மற்றும் கட்டார் உள்ளிட்ட நாடுகளிலுள்ள சில அங்காடிகளில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பிரான்ஸ் ஜனாதிபதியின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து லிபியா, சிரியா, காசாவில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில், பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்கும் முடிவை மத்திய கிழக்கு நாடுகள் கைவிட வேண்டுமென்று பிரான்ஸ் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்கும் அடிப்படை அற்ற அழைப்புகள் ஒரு தீவிர சிறுபான்மை குழுவால் மேற்கொள்ளப்படுவதாக பிரான்ஸின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முகமது நபியின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காட்டிய காரணத்திற்காக, பிரான்ஸில் கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி வரலாற்று விரிவுரையாளரான 47 வயதான சாமுவேல் பேட்டி என்பவர், இளைஞனொருவரால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தினால் ஆத்திரமடைந்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இஸ்லாமியவாதிகள் நமது எதிர்காலத்தை பறிக்க நினைப்பதால் ஆசிரியர் சாமுவேல் பேட்டி கொல்லப்பட்டார். ஆனால் பிரான்ஸ் கேலிச்சித்திரங்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது’ என கூறினார். இந்த பின்னணியிலேயே இந்த புறக்கணிப்புகள் இடம்பெற்று வருகின்றன.

முகமது நபி அல்லது அல்லாஹ்வின் (கடவுள்) சித்தரிப்புகள் அல்லது உருவங்களை இஸ்லாமிய பாரம்பரியம் வெளிப்படையாக தடைசெய்கிறது. ஆனால், மதச்சார்பின்மையை நாட்டின் அடையாளத்தின் மையமாக கொண்டுள்ள பிரான்ஸ் அரசாங்கம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளைப் பாதுகாக்க கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பது, ஒற்றுமையைக் குறைத்து மதிப்பிடும் செயல் போன்றது என கூறுகிறது.

பகிரவும்...