17 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் – உயர் நீதி மன்றில் மனு தாக்கல்!
கர்நாடகாவில் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்களில் 3 பேர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான் ரமேஷ், மகேஷ் மற்றும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் சங்கர் உள்ளிட்ட மூவரே இன்று (திங்கட்கிழமை) உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த மனுவில் சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவை இரத்து செய்யவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் 15 பேரும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.
இந்தநிலையில், அவர்களது இராஜினாமாவை ஏற்கமறுத்த கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார், 15 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 2 சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 17 பேரை தகுதி நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்தே இன்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கர்நாடகா சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.
கர்நாடகாவில் சட்டமன்ற உறுப்பினர்களின் இராஜினாமாவை தொடர்ந்து, குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் குமாரசாமி அரசு தோல்வியடைந்ததையடுத்து பெரும்பான்மையுடைய பா.ஜ.க. கட்சி ஆட்சிக்கு வந்தது. எடியூரப்பா முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.