Main Menu

அமெரிக்காவில் 20 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இந்தியர்களுக்கு பலவந்த சிகிச்சை!

அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களில் 3 பேர் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்ததால், அவர்களுக்கு பலவந்தமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு அகதிகளாக சென்று, ஓராண்டுக்கு மேலாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் விடுதலையை வலியுறுத்தி, கடந்த 9ஆம் திகதி முதல் 3 இந்தியர்கள் சிறைக்குள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களை நாடுகடத்துவது தொடர்பான வழக்குகளை தாங்கள் வெளியில் இருந்து சந்தித்துக்கொள்கிறோம் என்றும் உடனடியாக தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியும் தொடர்ந்து 20 நாட்களாக அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமடைதுள்ளது.

இந்நிலையில் தற்காலிக சிறையில் உள்ள வைத்தியர்கள் அவர்களை கட்டாயப்படுத்தி ஊசி மூலமாக கைகளில் குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர்.

இதனையடுத்து, சர்வதேச அகதிகள் பாதுகாப்பு சட்டத்தை மீறும் வகையில் அவர்களுக்கு பலவந்தமாக சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞரான லின்டா கோர்ச்சாடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் தஞ்சமடைய செல்லும் மக்களை அந்நாட்டின் சில மாநிலங்களில் உள்ள எல்லைப்பகுதியில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்து தற்காலிக சிறைகளில் தடுத்து வைத்துள்ளனர்.

அந்த வகையில், டெக்சாஸ் மாநில எல்லையில் கைது செய்யப்பட்டு எல் பாசோ பகுதியில் உள்ள சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இந்தியாவை சேர்ந்த சிலர் ஓராண்டுக்கு மேலாகியும் விடுதலை செய்யப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...