Main Menu

ஹொங்கொங் தலையீடு: ‘ஐந்து கண்’ கூட்டணிக்கு சீனா எச்சரிக்கை!

‘ஐந்து கண் கூட்டணி’ என அழைக்கப்படும் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து, கனடா ஆகிய நாடுகளுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹொங்கொங்கில் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்களை பணி நீக்கியதன் பின்னணியில் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து, கனடா ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டணி, சீனாவுக்கு எதிராக அணி திரண்டுள்ளன.

ஹொங்கொங்கில் அதிருப்தியாளர்களின் வாயடைக்கும் வேலையை சீனா செய்கிறது என இந்த கூட்டணி விமர்சனம் செய்தது. இந்தநிலையில், இதற்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவ் லீஜன் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் கண்கள் பிடுங்கப்படும். சீனா எப்போதும் தொல்லை கொடுப்பதில்லை. எதைப் பார்த்தும் அஞ்சுவதும் இல்லை. அவர்களுக்கு 5 கண்கள் இருக்கிறதா அல்லது 10 கண்கள் இருக்கிறதா என்பது பிரச்சனையே அல்ல’ என கூறினார்.

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கருதும் சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி நீக்குவதற்கு ஹொங்கொங் நிர்வாகத்துக்கு சீனா அதிகாரம் அளித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டதையடுத்து, ஹொங்கொங் நிர்வாகம், கடந்த வாரம் ஜனநாயக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் நால்வரைப் பதவி நீக்கியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனநாயக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவதாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...