Main Menu

ஹிந்தி பேசாத மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் முயற்சியை பா.ஜ.க. கைவிட வேண்டும்- வைகோ

ஹிந்தி பேசாத மக்களை, இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கும் முயற்சிகளை பா.ஜ.க.அரசு கைவிட வேண்டும் என ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நடுவண் அரசின் நல்வாழ்வுத்துறையின் கீழ் ஸ்வஸ்த ஏவம் ஜன் கல்யாண் சன்ஸ்தான் (SAJKS) என்ற கிளை அமைப்பு (Undertaking Institute) இயங்கி வருகின்றது.

இந்த அமைப்பு, இந்தியா முழுதும் கிராமப்புறங்களில் நல்வாழ்வுப் பணிகளை மேற்கொள்கின்றது. அடிப்படை வசதிகளைச் செய்கின்றது.

இதில் கணக்காளர்கள், எழுத்தாளர்கள், கணிணிப் பதிவாளர்கள், ஆய்வக உதவியாளர்கள், ஓட்டுநர்கள், தாதியர்கள், 13,000 பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான அறிக்கையை, கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி  வெளியிட்டு இருக்கின்றது.

விண்ணப்பம் தருவதற்கான கடைசி நாள் ஒக்டோபர் 8 முதல் ஒக்டோபர் 24 வரை என்று குறிப்பிட்டு இருக்கின்றார்கள். ஒரு திகதியைக் குறிப்பிட்டு வரையறுக்காத இந்த நடவடிக்கை, அப்பட்டமான முறைகேடு ஆகும்.

இந்தப் பணி இடங்களுக்குத் தேர்வு செய்யப்படுகின்றவர்கள், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வேலை செய்தாக வேண்டும் எனக் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.

வழக்கமாக நடுவண் அரசுத் துறைகள் நடத்துகின்ற தேர்வுகளில், கேள்வித்தாள்கள் அனைத்தும் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இருக்கும்.

ஆனால் இந்த அறிவிப்பில், முதன்முறையாக 25 மதிப்பெண்களுக்கான கேள்விகள் ஹிந்தியில் மட்டுமே இருக்கும். அதற்கு ஹிந்தியில்தான் விடைகள் எழுத வேண்டும் என வெளிப்படையாகவே அறிவித்து இருக்கின்றார்கள்.

ஹிந்தித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என வெளிப்படையாகவே அறிவித்து இருக்கின்றார்கள். இந்த அறிவிப்பின் பத்தாம் பக்கத்தில், பந்தி 18 இல் குறிப்பிட்டுள்ளதாவது, கணக்காளர், எழுத்தாளர்கள், கணினிப் பதிவாளர்கள், ஆய்வகப் பணியாளர்கள் 40 மதிப்பு பெண்கள் ஹிந்தித் தேர்வு எழுத வேண்டும்.

பன்னோக்குப் பணியாளர்கள் மற்றும் கார் ஓட்டுநர்கள் ஹிந்தித் தேர்வில் 25 மதிப்பெண்கள் பெற வேண்டும். தாதியர்கள் 10 மதிப்பெண் பெற்றாக வேண்டும்.

அதாவது, ஹிந்தி தெரியாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு, விண்ணப்பிக்கும் தகுதியும் இல்லை, வேலை வாய்ப்பும் கிடையாது. ஹிந்தி பேசாத மாநிலங்களில் பணிபுரியவும் ஹிந்திக்காரர்கள் மட்டுமே தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என்ற நிலையை உருவாக்கி இருக்கின்றார்கள். இது ஹிந்தியக் கூட்டு ஆட்சித் தத்துவத்தின் மீது வெடிகுண்டு வீசும் தேர்வு.

இத்தகைய அறிவிப்பை, நடுவண் அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ஹிந்தி பேசாத மக்களை, இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கும் முயற்சிகளை, பாரதிய ஜனதா அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...