Main Menu

வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற் சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு!

வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழிற்கு விஜயம் செய்திருந்த நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாண மக்களுடைய பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து கவனஞ்செலுத்தியதுடன், நுண்கடன் தொடர்பான பிரச்சினை குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முதலீடுகள் மற்றும் கடன் வசதிகள் சம்பந்தமான கலந்துரையாடல் இன்று (சனிக்கிழமை) யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

இதில், இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பங்கேற்று யாழ்ப்பாணத்தில் முதலீடுகள் மற்றும் கடன் வசதிகள் தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இந்தக் கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், மத்திய வங்கி அதிகாரிகள், பிரதேச அரச, தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள், முதலீட்டாளர்கள், நொதேர்ன் தனியார் வைத்தியசாலை பணிப்பாளர், பனை அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை நிர்வாகத்தினர் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், “யாழ்ப்பாண மக்களுடைய பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தோம்.

குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் வர்த்தக சங்கங்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது பல்வேறுபட்ட விடயங்கள் குறித்து ஆராய்ந்திருந்தோம்.

பனை அபிவிருத்தி தொடர்பாகவும் பனை உற்பத்திகளை எவ்வாறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பதையும் ஆராய்ந்ததுடன் புகையிலை உற்பத்தி மற்றும் புகையிலை உற்பத்திப் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளோம்.

அத்துடன், படகுக் கட்டுமானங்கள், விவசாயம் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, அரச பொருளாதார ஊக்குவிப்பு நிறுவனங்களின் ஒத்துழைப்பினூடாக சில திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதாரச் செயற்பாடுகளை முன்னெடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பாக விரிவாக ஆராய்ந்ததுடன் இந்த இரண்டு துறைகள் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை மேலும் அதிகரிக்க முடியும் என்பது வலியுறுத்தப்பட்டது.

வட பகுதியிலுள்ள சிறு தொழில் முயற்சியாளர்கள், நடுத்தரத் தொழில் முயற்சியாளர்கள் தாமாகவே தமது நிலையை மேம்படுத்திச் செல்வது வரவேற்கத்தக்கது.

முதலீட்டாளர்களுக்கு எமது அமைச்சின் ஊடாக பூரண ஒத்துழைப்பினை வழங்கத் தயாராக இருக்கின்றோம். அத்தோடு, வட பகுதியில் இவ்வாறான சுயதொழில் முயற்சியாளர்கள், நடுத்தர முயற்சியாளர்களுக்கு எம்மாலான உதவியை வழங்கி அவர்களை மேம்படுத்துவதன் மூலம் எமது பிரதேசத்தில் பொருளாதாரத்தை முன்னேற்றிச் செல்லமுடியும்.

இதேவேளை, வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறப்பதற்கு நாங்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட்டு வருகின்றோம். எனினும், எதிர்காலத்தில் அவற்றை மீளத் திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

இதனைவிட, நுண் கடன் திட்டம் என்பது ஒரு பிரச்சினையான சமூகத்தில் மாறியுள்ளது. குறிப்பாக கடன் பெற்றவர் பலர் அதனை திருப்பி செலுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

அத்தோடு, வியாபார வலையமைப்பும் இந்த நுண் கடன் பிரச்சினைக்கு ஒரு காரணமாகக் காணப்படுகின்றது. எனினும், இதுகுறித்து நாம் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றோம்” என்று குறிப்பிட்டார்.

பகிரவும்...