குலம் சார்ந்த அரசியல் இன்றி சுரேஷ் சலேவுக்கு நீதியை நிலை நாட்டுங்கள்: முன்னாள் அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்
இந்த விடயம் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினர் காட்டும் விசித்திரமான மௌனம் அல்லது பொறுப்பற்ற எதிர்வினைகளுக்கு மத்தியில், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, பொறுப்புள்ள பிரஜைகளாகவும், ஒரு காலத்தில் இந்த நாட்டின் கொள்கை வகுப்பாளர்களாகவும் இருந்த தாங்கள், தனிப்பட்ட முறையில் ஜனாதிபதியின் அவதானத்தை ஈர்க்கத் தீர்மானித்ததாக அவர்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
சுரேஷ் சலே மூன்று மாதங்களுக்கும் மேலாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை நீதிமன்ற உத்தரவினால் அல்லாமல், பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவின் படியே ஆகும் என சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இதுவே தற்போதைய சமூக கலந்துரையாடலை எதிர்மறையான நிலைக்கு இட்டுச் சென்ற முதல் புள்ளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அவர் கொடூரமான முறையில் நடத்தப்படுவதாக எந்தவொரு அரசியல் கட்சியும் அல்லாமல், இரு புகழ்பெற்ற ஜனாதிபதி சட்டத்தரணிகளே நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் வெளிப்படுத்தியுள்ளனர் என அந்த கடிதத்தில் விபரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த ஜனாதிபதி சட்டத்தரணிகளின் வெளிப்படுத்தலுக்கு சட்டபூர்வமான மற்றும் விஞ்ஞானபூர்வமான அடிப்படையை வழங்கும் வகையில் சட்ட மருத்துவ அதிகாரி ஒருவரால் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்தக் கடிதத்தின் மூலம் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முடக்குவதற்கு தங்களது குழுவினர் எண்ணவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அப்பாவியான பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவது எவ்விதத்திலும் தாமதிக்கக் கூடாது என்றும், அது ஜனாதிபதியின் முதன்மையான பொறுப்பு என்றும் தெரிவித்துள்ள அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதற்கான சட்ட நடவடிக்கைகள் குலம் சார்ந்த, அரசியல் கலப்பற்ற, நம்பகமானவையாக அமைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
