Main Menu

மியன்மாரில் நாடுதழுவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு

மியன்மார் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் முக்கிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து விடுத்துள்ள கூட்டு அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கையில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நேரம் தற்போது வந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேநேரம், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மியன்மார் மக்களினால் தொடர் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மியன்மாரில் கடந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

எனினும் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக அந்நாட்டு இராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்ததுடன், புதிய அரசை ஏற்கவும் இராணுவம் மறுப்பு தெரிவித்து வந்தது.

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆங் சாங் சூகி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்த இராணுவம் பொறுப்பை கைப்பற்றிக்கொண்டது. அத்துடன் ஆங் சாங் சூகி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களையும் இராணுவம் வீட்டுச் சிறையில் வைத்தது.

இதையடுத்து மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மியன்மார் பாதுகாப்பு பிரிவினரின் தாக்குதலில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...