மலையக மக்களின் உணர்வுகளோடு எவரும் விளையாட வேண்டாம்: அனுஷா சந்திரசேகரன்
”குப்பி லாம்பின் வெளிச்சத்தில் படித்து பட்டம் பெற்ற பட்டதாரிகளையும் குடும்ப கஷ்டத்திற்காக குடும்ப சுமையை தன்மீது சுமத்திக்கொண்டு படித்த மேதைகளையும் கொண்டது எங்கள் மலையக மண். எனவே, எவரும் எமது உணர்வுகளோடு விளையாட வேண்டாம்” என மலையக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
எம் சமூகத்தை விமர்சிக்க எத்தனிப்பவர்களுக்கு ஒன்று மட்டும் தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகிறேன். யாரோ ஒருவரின் வாய் வார்த்தையை பெரிதாக்கி அதில் அரசியல் செய்யும் நோக்கத்தோடு இதை நான் தெரிவிக்கவில்லை.
மலையகத்தில் பிறந்த பெண்ணாக ஒரு சட்டத்தரணியாக ஏனைய அனைத்து சமூகத்தையும் மதிக்கும் பிரஜையாக ஒரு பணிவான வேண்டுகோளாக இதனை பகிர்கிறேன். வேண்டுகோளை ஏற்காவிட்டால் எச்சரிக்கையாக இருக்கட்டும்.
நாங்கள் மலையக சமூகமாக கல்வி, விளையாட்டு, கலாசார துறை மட்டுமன்றி இதர பல துறைகளிலும் பிற சமூகத்தினருக்கு நிகராகவே வளர்ச்சியடைந்துள்ளோம்.
அதே போன்று ஒரு அறையில் குப்பி லாம்பின் வெளிச்சத்தில் படித்து பட்டம் பெற்ற பட்டதாரிகளையும் குடும்ப கஷ்டத்திற்காக குடும்ப சுமையை தன்மீது சுமத்திக்கொண்டு படித்த மேதைகளையும் கொண்டது எங்கள் மலையக மண்.
வீணாக எங்களின் வளர்ச்சியை பற்றி தெரியாமல் அறியாமல் விமர்சிக்க வேண்டாம். குட்ட குட்ட குனிபவர்கள் அல்ல நாங்கள், இனியாயினும் பொதுவெளியில், சமூக வலைத்தளங்களில், ஊடகங்களில் எம் சமூகம் சார்ந்த வார்த்தை பிரயோகங்களை கவனமாக கையாளவும், அண்மையில் பேராசிரியர் ஒருவர் மலையக மக்கள் தொடர்பாக கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அனுஷா, ஒரு பேராசிரியர் என்ற ரீதியில் தங்களின் மீது கல்வியியலாளராக நன்மதிப்புள்ளது. அதற்காக நீங்கள் பிற சமூகம் தொடர்பாக தெரிவிக்கும் கருத்துக்கள் யாவும் சரி என்றாகிவிடாது.
உயர்தரம் வரைக்கும் மட்டுமே படித்து பட்டதாரியில்லாத போதும் கல்வியின் சமூக வளர்ச்சிக்காக பாடுபட்ட எம் வீர தலைவர் சந்திரசேகரனின் புதல்வியாகவும் அதே மலையக மண்ணின் பட்டதாரியாகவும் சட்டத்தரணியாகவும் கூறுகிறேன், எங்கள் உணர்வுகளோடு விளையாட வேண்டாம்.இளைஞர்களே, நண்பர்களே, சகோதர சகோதரிகளே இவரை போன்றவர்களை விமர்சிப்பதில் காலத்தை கடத்தாமல் எமது அடுத்த கட்டத்தை பற்றி சிந்திப்போம்! மலையகம் எமது தாயகம் நாம் ஒரு தேசியம் என்பதை உரத்துச்சொல்லுவோம் எனவும் என்று தெரிவித்துள்ளார்.