பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு: டிசம்பரில் மீண்டும் விசாரணை!
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் 70 ஆவது சுதந்திரத்தினக் கொண்டாட்டத்தின் போது, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போதே அவருக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக நீதவான் அறிவித்தார்.
இதேவேளை குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, தமிழ் மக்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி நீதிமன்றத்திற்கு முன்னால் புலம்பெயர் அமைப்புக்கள் ஆர்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
குறிப்பாக பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை உடனடியாக கைது செய்ய இதன்போது அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு முன்னர் பிரிகேடியரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு, நீதவான் நீதிமன்ற அலுவலக சபைக்கு இடையில் ஏற்பட்ட தாமதப் பிரச்சினை காரணமாக, நீக்கிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.