பா.சிதம்பரத்தின் மனுமீதான விசாரணை குறித்து நாளை உத்தரவு!
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரத்தின் மனு மீதான விசாரணைகளில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமுலாக்கதுறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து பா.சிதம்பரம் சார்பில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனு இன்று (வியாழக்கிழமை) சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்போது பா.சிதம்பரம் சார்பில் வாதாடிய சட்டதரணி கபில் சிபல், பா.சிதம்பரத்தின் சிறைவாசத்தை நீடிக்க அமுலாக்கத்துறை விரும்புகிறது.
அவரின் சிறைவாசத்தை நீடித்து, அவருக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்துவது தவறான நோக்கமாகும். அமுலாக்கத்துறையினரின் விசாரணைகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து அமுலாக்கத்துறையினர் சார்பில் ஆஜரான சட்டதரணி துஷார் மேத்தா, பா.சிதம்பரத்தை அமுலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரணை செய்வதற்கு விரும்பவில்லை எனவும், தேவைப்படும்போது அமுலாக்கத்துறை சார்பில் காவலில் எடுக்க விண்ணப்பிப்போம் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட சிறப்பு நீதிபதி சிதம்பரத்தின் மனுமீது நாளை பிற்பகல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்துள்ளார்.