நாட்டையும், மக்களையும் நன்கு அறிந்தவரே சஜித் பிரேமதாச : திஸ்ஸ அத்த நாயக்க
நாட்டையும் அந்நாட்டு மக்களையும் நன்கு அறிந்தவரே சஜித் பிரேமதாச. அவர் எதிர்வரும் ஜனாதிபதியாகத் தேர்தலில் வெற்றிப்பெற்றால், பத்து இலட்சத்துக்கும் குறைவான கடன் பெற்று அதனை உரிய காலத்திற்குள் திருப்பி செலுத்த முடியாமல் கடன் பற்றிய தகவல் பணியகத்தின் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளவர்கள் அதிலிருந்து விடுபட அவர்களுக்கு மேலும் ஒரு வருடம் கால அவகாசம் வழங்கப்படும் என்று ஐ.தே.கவின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்க தெரிவித்தார்.
இதன் மூலம் கடன் பிரச்சினையால் வாழ்க்கையில் முன்னேற முடியாமலிருப்பவர்கள் மீண்டெழுவதற்கு வாய்ப்பளிக்கப்படும். இவ்வாறு மக்களின் தேவையையும் அவர்களது நிலைப்பாட்டையும் அறிந்து செயற்படும் தலைவரே அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டிருக்கிறார்கள். எனினும் அவற்றில் குறிப்பிடப்படாத முக்கிய அம்சம் ஒன்று சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது பத்து இலட்சத்துக்கும் குறைந்த கடன் பெற்று அதனை மீள் செலுத்த முடியாமலிருப்பவர்கள் கடன் பற்றிய தகவல் பணியகத்தின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர். அவ்வாறு குறித்த பட்டியலுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளவர்களை அதிலிருந்து ஒரு வருடத்திற்குள் விடுவிப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கிறார்.
பெண்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் என ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இவ்வாறு கடன் பெற்று அதனை மீள் செலுத்த முடியாமல் உள்ளனர். அவர்களுக்கு மேலும் ஒரு வருட கால அவகாசம் வழங்கி அதிலிருந்து விடுபடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
மேலும் பொருட்கள் மற்றும் சேவை கள் மீதான மறைமுக வரிச்சுமை தொடர்பிலும் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கின்றது. எமது உற்பத்திகளிலிருந்து நூற்றுக்கு எண்பது வீதம் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான மறைமுக வரி அறவிடப்படுகிறது. நூற்றுக்கு 60 வீதமாகக் குறைப்பதாக கொள்கை ரீதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கு பிரதான காரணம் மறைமுக வரி அறவிடப்படுகின்றமையே ஆகும். சீனி மற்றும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் மறைமுக வரி தாக்கம் செலுத்துகிறது. இதனை நூற்றுக்கு 20 வீதத்தில் குறைப்பதன் மூலம் மக்களுக்கு சலுகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சஜித் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியிருக்கிறார்.
அத்தோடு மேலும் வெளிநாட்டு வருமான வரியை நீக்குவது தொடர் பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நூற்றுக்கு இரண்டரை வீதம் வட்வரியை குறைப்பதாகவும் கூறியிருக்கிறார். இதன் மூலம் 15 வீத வட்வரி, பன்னிரண்டரை வீதமாகக் குறை வடையும். இதேபோன்று மேலும் பல முக்கிய விடயங் கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வ தற்கு தேசிய ரீதியிலான பார்வை அவசிய மாகும். அத்தோடு நாட்டு மக்களின் நிலைப்பாடும் முக்கியத்துவமுடையதாகும். இவற் றை ஆராய்ந்தே சஜித் பிரேமதாச தனது யோசனைகளை முன்வைத்திருக்கிறார்.