நம்பிக்கையை கட்டியெழுப்புங்கள்
புதிய அரசாங்கம் பதவியேற்று சுமார் ஒருமாதகாலம் கடந்துள்ள நிலையில் புதிய தொரு தசாப்தத்துக்கான ஆரம்பம் நிகழ்ந்திருக்கின்றது. இதனை வெறுமனே 2020 ஆம் ஆண்டின் ஆரம்பம் என்று கூறுவதை விட அடுத்த பத்து வருடங்களுக்கான அல்லது ஒரு தசாப்தத்துக்கான ஆரம்பம் என்று கூற முடியும்.
இவ்வாறு புதிய அரசாங்கம் மற்றும் ஒரு தசாப்தத்துக்கான ஆரம்பம் என்பவற்றுக்கு மத்தியில் இந்த நாட்டில் மக்கள் முக்கிய மாக தமிழ்ப்பேசும் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மற்றும் நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்படப்போகின்றன என்பதே மிக முக்கியமான விடயங்களாக அவதானிக்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல்பிரச்சினை, மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகள், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் என இந்த நாட்டின் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகள், விரைவாக தீர்க்கப்படவேண்டும் என்பது பரந்துபட்ட ரீதியிலான எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது. இங்கு அவசியமாக ஆராயப்படவேண்டிய விடயமாக இருப்பது இந்தப் பிரச்சினைகளை எவ்வாறு பதவியிலிருக்கின்ற அரசாங்கம் தீர்க்கப்போகின்றது என்பதே. அதாவது புதிய ஜனாதிபதி இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக எவ்வாறான அணுகுமுறைகளை முன்னெடுக்கப்போகின்றார் என்பது பலரதும் அவ தானத்திற்குட்பட்டுள்ளதாக இருக்கிறது.
பிரதான பிரச்சினை
இந்த நாட்டைப் பொறுத்தவரையில் 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் பல்வேறு தீர்க்கப்படாத நீண்டகாலப் பிரச்சினைகள் நீடித்து வருகின்றன. தீர்க்க முடியுமான பல பிரச்சினைகளும் காணப்படுகின்றன. நீண்டகாலப் பிரச்சினைகள், மற்றும் அந்தந்தக்காலப்பகுதியில் ஏற்படும் பிரச்சினைகள் என பல நெருக்கடிகளுக்கு விரைவாக அரசாங்கம் தீர்வு காண வேண்டி இருக்கிறது. அதாவது இவற்றின் விடிவு தொடர்பாக மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்படவேண்டும்.
இங்கு முக்கியமான பிரச்சினைகளை நாம் வரிசைப்படுத்த முனைவோமானால் தமிழ்த்தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. தமிழ்ப்பேசும் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்கில் அரசியல் அதிகாரப்பகிர்வுத் திட்டமொன்று தமக்கு வழங்கப்பட வேண்டுமென நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததில் இருந்து கோரி வருகின்றனர். அந்த நெருக்கடிக்கு, இன்னும் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதான மற்றும் தமிழ்ப்பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ளக்கூடியதான தீர்வுத்திட்டத்தை அடைய முடியவில்லை. எனவே புதிய ஜனாதிபதி இந்தப் பிரச்சினைக்கு எவ்வாறு ஒரு நிரந்தரத் தீர்வைக் காணப்போகின்றார் என்பது இங்கு முக்கியமான விடயமாக காணப்படுகின்றது.
தமிழ் மக்களின் நிலை
தாம் இந்த நாட்டில் ஒரு சமத்துவமான பிரஜையாக நடத்தப்படவில்லை. எனவே எமக்கு ஓர் அரசியல் அதிகாரப்பகிர்வு அவசியம் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக காணப்படுகிறது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தான் நாடு முழுவதிலும் சமத்துவமான முறையில் அபிவிருத்தியை முன்னெடுப்பதன் மூலம் இந்த பிரச்சினையை தீர்க்கப் போவதாக அறிவித்திருக்கின்றார். அபிவிருத்தியே, பிரச்சினை தீர்வுக்கான ஒரே வழி என்பது ஜனாதிபதியின் தெளிவான கருத்தாக அமைந்திருக்கின்றது.
இந்தத் தேசிய பிரச்சினை மட்டுமன்றி மேலும் பல்வேறு பிரச்சினைகள் இந்த நாட்டின் அவசரமாக தீர்க்கப்படவேண்டியவையாக உள்ளன.
பொதுவான பிரச்சினைகளை எடுத்துநோக்கும்போது அபிவிருத்தி, பாதுகாப்பு விடயம், பொருளாதார வளர்ச்சி, வேலையின்மை, வறுமை, இளைஞர் பிரச்சினைகள், ஒழுக்கம் சம்பந்தமான சிக்கல்கள், அரசியல் நெருக்கடிகள், சுற்றாடல் பிரச்சினைகள், சமூகங்களுக்கிடையிலான தேசிய ஒற்றுமை, புரிந்துணர்வு, தேசிய நல்லிணக்கம், துறைசார் அபிவிருத்தி, கல்வி, சுகாதார போக்குவரத்து உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயதானங்கள் அவசரமாக ஆராயப்படவேண்டியவையாகக் காணப்படுகின்றன. ஜனாதிபதி கோத்தபாய தலைமையிலான புதிய அரசாங்கம் இந்த விடயங்களை எவ்வாறு அணுகும் என்பது எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான காரணியாக உள்ளது.
எவ்வாறு செய்யப்போகிறார்?
இவை தொடர்பில் எவ்வாறான அணுகு முறைகளை முன்னெடுக்க இருப்பதாக ஜனாதிபதி கோத்தபாய தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். எனினும் அவை எவ்வாறு செயற்பாட்டு ரீதியாக முன்னெடுக்கப்பட போகின்றன என்பதே இங்கு எதிர்பார்க்கும் விடயமாக உள்ளது. எவ்வாறு இந்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்பது தொடர்பாக மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இவற்றில் மிக அவசரமாக திருத்தப்படவேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக பொருளாதார வளர்ச்சி வீதங்கள் அண்மைய வருடங்களாக வீழ்ச்சியடைந்த நிலையிலேயே உள்ளன. அவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
அத்துடன் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல், மற்றும் மக்களின் மனிதவளத்தை மேம்படுத்துதல், திறன் அபிவிருத்தியை முன்னெடுத்தல் போன்றவை தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படவேண்டும்.
வடக்கு–கிழக்கு
அதேபோன்று வடக்கு–கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும்போது அங்கு நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளன. 2009ஆம் ஆண்டு மூன்று தசாப்தகால யுத்தம் நிறைவுக்கு வந்தது. எனினும் அந்த யுத்தம் ஏற்பட்டமைக்கான காரணிகள் இதுவரை தீர்க்கப்படவில்லை. அதேபோன்ற 30 வருடகால யுத்தத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை. யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தம் நிறைவடைந்துள்ள சூழலிலும் குறித்த பிரச்சினைகள் யாவும் இன்னும் தீர்க்கப்படாமை உள்ளமையானது ஒரு துரதிஷ்டவசமான நிலைமையாகும்.
வடக்கு–கிழக்கைப் பொறுத்தவரையில் பல சிக்கல்கள், இன்னும் தீர்க்கப்படாமல் நீடித்துக்கொண்டிருக்கின்றன. பொறுப்புக்கூறல் விவகாரம், காணாமல்போனோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் விடயம், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி, இழப்பீடு விடயம், வாழ்வாதாரப் பிரச்சினை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்தல், தேசிய ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் பலப்படுத்துதல், காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகளில் தாமதம், மற்றும் கல்வி சுகாதாரம், போக்குவரத்து பல நெருக்கடிகள் வடக்கு–கிழக்கில் நீடித்துக்கொண்டிருக்கின்றன. எனவே இந்த பிரச்சினைகளை அரசாங்கம் விரைவாக தீர்த்து வைப்பதற்கு எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்பது தமிழ்மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மிக முக்கியமாக வடக்கு–கிழக்கைப் பொறுத்தவரையில் காணாமல் போனோர் விவகா ரம், அரசியல் கைதிகள் விடயம், இழப்பீடு வழங்குதல், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை என்பன மிக அவசரமாக அவதானம் செலுத்தப்படவேண்டிய அம்சங்களாக உள்ளன.
காணாமல்போனோர் விவகாரம்
காணாமல்போனோரைப் பொறுத்தவரையில் மக்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டே இருக்கின்றனர். தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடித்து வெளிப்படுத்த வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோருகின்றனர். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ காணாமல்போனோரை மீண்டும் கொண்டுவர முடியாது என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒரு கட்டத்தில் தெரிவித்திருந்தார்.
எப்படியிருப்பினும் காணாமல்போனோரின் உறவுகள் அதாவது பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு எந்தவிதமான இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை. காணாமல்போனோர் குறித்து ஆராய கடந்த அரசாங்கத்தின் காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டது. எனினும் புதிய அரசாங்கத்தில் அந்த அலுவலத்தில் எவ்வாறு செயற்படப்போகின்றது என்பது தொடர்பாக தெளிவற்ற தன்மை காணப்படுகின்றது. கடந்த அரசாங்க காலத்தில் இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும் ஒரு அலுவலகம் நியமிக்கப்பட்டது. அந்த அலுவலகம் அடுத்த கட்டமாக எவ்வாறு செயற்படப்போகின்றது என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. காணாமல்போனோரின் இந்தப் பிரச்சினைக்கு ஜனாதிபதி கோத்தபாய தலைமையிலான அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வை வழங்குவது அவசிய மாகிறது. அந்த பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு வாழ்வாதார உதவிகள் செய்யப்படவேண்டும் என்பதுடன் இழப்பீடுகள் வழங்கப்படுவதும் அவசியம். முக்கியமாக பிள்ளைகள் காணாமல்போயுள்ள பெற்றோர், கணவன் காணாமல் போயுள்ள நிலையில் மனைவி, சகோதரர்கள் காணாமல் போயுள்ள நிலையில் உறவினர்கள் என பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு மட்டங்களில் இருக்கின்றனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு கூட கஷ்டப்படுகின்ற நிலைமையே நீடிக்கின்றது. அதுமட்டுமன்றி அவர்களின் சமூக பாதுகாப்பு தொடர்பாகவும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
எனவே இந்த விடயம் தொடர்பாக அவசரமாக கவனம் செலுத்தப்படவேண்டும். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தயாராக இருப்பதாக பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார். எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும்.
நம்பிக்கையை கட்டியெழுப்புங்கள்
உறவுகளையும் உடைமைகளையும் இழந்து இந்த மக்கள் விரக்தியில் இருக்கின்றனர். அவர்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது மிக பிரதான விடயமாகும். நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதில் குறைபாடு காணப்படின், அங்கு விரிசல்கள் ஏற்படும் ஆபத்து இருக்கிறது. எனவே அதற்கு இடமளிக்காமல் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நம்பிக்கைய கட்டியெழுப்புவதுடன் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டங்கள் அவசியம். கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு–கிழக்கு தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தனர். அந்த தீர்மானமானது தென்னிலங்கை மக்களின் தீர்மானத்திலிருந்து முற்று முழுதாக மாறியிருந்தது.
விஜேதாசவின் யோசனை
எனவே அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக ஆராயவேண்டும். அதாவது அபிவிருத்திகள் இடம்பெற்றபோதிலும் இந்த மக்களின் மனதை வெல்வதற்கு தென்னிலங்கை அதிகாரத்தரப்பினரால் முடியவில்லை என்பது தெளிவாகின்றது. எனவே அந்த நிலைமை ஏன் ஏற்பட்டது என்பதை ஆராயவேண்டும். இது தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தமிழ்ப் பேசும் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்றும் அதற்கு ஒரு தனி அமைச்சு உருவாக்கவேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்த வேலைத்திட்டத்தில் தமிழ்க் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இணைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் தமிழ்மக்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ள, மக்கள் பிரதிநிதிகளை தொடர்புபடுத்தாமல் எவ்வாறு அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் என்பது தெரியவில்லை. எனினும் அந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேடமாக ஆராய்ந்து விரைவாக தீர்வைப் பெற்றுக் கொடுத்து மக்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கையை கட்டியெழுப்புவது அவசரமாக செய்யவேண்டிய ஒரு காரியம். யுத்தம் முடிந்து பத்துவருடகாலமாக இந்தக் காரியம் செய்யப்படாமல் இருக்கின்றமையானது ஒரு துரதிஷ்டவசமான நிலை என்பதே யதார்த்தம்.
எனவே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இந்த விடயத்தில் என்ன செய்யப்போகிறார் என்பதை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர் ஒரு பலமான தலைவர் என பார்க்கப்படுகின்றார். எனவே இந்த விடயங்களில் அவரின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மலையக மக்களின் பிரச்சினைகள்
மலையக மக்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளும் உடனடி கவனத்திற்குட்படுத்தப்படவேண்டும். மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தைப் பெற்றுக் கொடுப் பதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ வாக்குறுதி அளித்திருக்கின்றார். அந்த விடயம் விரைவாக நிறைவேற்றப்படுவது இன்றியமையாதது. அதுமட்டுமன்றி அவர்களின் வீட்டுப்பிரச்சினை, சுகாதாரம், கல்வி போக்குவரத்து மற்றும் சமூக அபிவிருத்தி என்பனவும் உடனடி அவதானத்திற்குட்படுத்தப்பட்டு தேவையான மறுசீரமைப்பு இடம்பெறவேண்டியது அவசியம். புதிய ஜனாதிபதி இந்த விடயத்தில் தான் முன்வைத்துள்ள விஞ்ஞாபனத்திற்கு அமைய எவ்வாறு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பார் என மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். கடந்த சில வருடங்களாக மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000ரூபா சம்பளம் என்பது ஒரு கனவாகவே இருந்து வருகின்றது. எனவே விரைவில் அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை ஜனாதிபதி வழங்குவார் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முஸ்லிம் மக்கள்
அத்துடன் முஸ்லிம் மக்களின் பிரச்சினை கள் தொடர்பாகவும் உடனடியாக அவதா னம் செலுத்தப்படவேண்டும். அந்த மக்களின் அரசியல் சமூக கலாசார பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் ஆராயவேண்டும். ஆளும் கட்சியில் இருக்கின்ற முஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்து, பிரச்சினைகள் இருக்கும் இடத்தில் அவற்றைத் தீர்ப்பதற்கான யோசனைகளை முன்வைப்பது அவசியமாகின்றது.
ஜனாதிபதி கூறும் சமத்துவ அபிவிருத்தி
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அடிக்கடி சமத்துவம் குறித்து பேசிவருகின்றார். அனைத்து மக்களுக்கும் சமத்துவமான அபிவிருத்தியும் வளப்பகிர்வும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி கூறிவருகிறார். எனவே அந்த நாட்டில் வாழும் எந்தவொரு சமூகத்திற்கும் அநீதிகள் ஏற்படாதவகையில் சமத்துவமான நிர்வாகத்தை ஜனாதிபதி முன்னெடுப்பார் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். புரையோடிப்போயுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து புதியதொரு நாட்டைக் கட்டி யெழுப்ப ஆளும் தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும். மலர்ந்துள்ள புதிய வருடத்தில் மற்றும் புதிய தசாப்தத்தில் பல்லின மக்களுக்கிடையில் ஒற்றுமையை முன்னெடுத்து பன்முகத்தன்மையில் வெற்றிகாண ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கம் செயற்படுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த எதிர்பார்ப்பை செயற்பாட்டு ரீதியில் எவ்வாறு நடைமுறைப் படுத்தப்போகின்றனர் என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
- ரொபட் அன்டனி