Main Menu

தேசிய பாதுகாப்புக்கு வழங்கிய முக்கியத்துவத்தை குறைத்ததாலேயே ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது – அறிக்கை குறித்து ஜனாதிபதி!

அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு வழங்கிய முக்கியத்துவத்தை குறைத்ததாலேயே ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மற்றுமொரு கூட்டம் நேற்று (சனிக்கிழமை) மாத்தறை – பிட்டபெத்தர – கிரிவெல்லகெலே கிராமத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியுற்று, சர்வதேச அரங்கிற்கு சென்று ஜெனிவாவில் தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கி நாட்டின் இறைமை மற்றும் சுயாதீனத்தன்மையை முற்றாக சீரழித்தனர் என தெரிவித்தார்.

இணை அனுசரணை வழங்குவதிலிருந்து தாம் விலகினோம் என்றும் அதற்காக அவர்கள் எமக்கு எதிராக செயற்படுகின்றனர். எம்மால் அதனை அச்சமின்றி எதிர்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் இந்து சமுத்திரத்தின் பலம்பெருந்திய நாடுகளின் போராட்டங்களுக்குள் அகப்படுவதற்கான தேவை தமக்கில்லை எனவும் ஜனாதிபதி கூறினார்.

தனது ஆட்சிக்காலத்தில் எதிர்கொள்ள நேரிட்ட பிரச்சினைகள் அனைத்தும் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை திருத்துவதற்கு முயன்றதால் ஏற்பட்டவையெனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

பகிரவும்...