Main Menu

துயர் பகிர்வோம்- கே எஸ் வேலாயுதம் அவர்கள் (TRT தமிழ் ஒலி வானொலி ஐரோப்பிய செய்தியாளர்) 21/08/2023

தாயகத்தில் காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகக் கொண்டவரும் நெதர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியத்தை வதிவிடமாகக் கொண்டிருந்தவருமான பிரான்ஸ் TRT தமிழ் ஒலி வானொலியின் ஐரோப்பிய செய்தியாளர் கே எஸ் வேலாயுதம் அவர்கள் 21ம் திகதி ஆகஸ்ட் மாதம் திங்கட்கிழமை இன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற திருமதி யோகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் அன்புக் கணவரும், நந்தினி (பாரிஸ்), சுகந்தினி (லண்டன்), வசந்தினி (அவுஸ்திரேலியா), மகிந்தன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் திரு. சண்முகநாதன், திரு மகாமேனன் (லண்டன்), முகுந்தன் இரசாயன எந்திரவியலாளர் (அவுஸ்திரேலியா), ஜெய மனோகரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சுவேதா நிவேதா(பாரிஸ்), அக்ஷயா ஆரூரன் (லண்டன்), மதுஷா மிதுசா (லண்டன்) , யாகினி பரின் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலி

தாயகத்தில் எழில் கொஞ்சும் காரைநகரை பிறப்பிடமாகக் கொண்ட, ஐக்கிய இராச்சியத்தை வதிவிடமாகக் கொண்டிருந்த பிரான்ஸ் TRT தமிழ் ஒலி வானொலியின் ஐரோப்பிய செய்தியாளர் கே எஸ் வேலாயுதம் அவர்கள் தனது 78வது வயதில் இறைவனடி சேர்ந்த செய்தியினை அறிந்து எமது வானொலி குடும்பமும், அன்பு நேயர்களும் ஆற்றொணா துயரத்தில் உள்ளோம். வேலாயுதம் ஐயா அவர்களுக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கத்துடன் கண்ணீர் அஞ்சலியையும் செலுத்துகின்றோம்.

அமரர் திரு கதிர்காமர் சரவணை வேலாயுதம் அவர்கள் கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் இரசாயன தொழிற்சாலையில் ஆய்வுகூட உதவியாளராக, பின்னர் நிர்வாக லிகிதர் ஆக தொழில் புரிந்து, அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் பத்திரிகை நிருபராக, நாடக நடிகராக தயாரிப்பாளராக, திரைப்பட நடிகராக, இலங்கை வானொலி நடிகர், வானொலி மாகாண செய்தியாளராக, தொழிற் சங்க வாதியாக வாழ்ந்து, பின்னர் டச்சு நாட்டில் வாழும்போது டச்சு மக்களுடன் இணைந்து மனித உரிமை அமைப்பை அமைத்து தமிழ் அகதிகளுக்கு உதவிகளை 20 வருடமாக வழங்கி, பின்னர் தற்போது ஐக்கிய ராச்சியத்தில் பதிவு செய்யப்பட்ட மொழி பெயர்ப்பாளராகவும் பணிபுரிந்து வந்த வேலாயுதம் ஐயா அவர்கள் எமது வானொலியுடன் ஆரம்ப காலம் முதல் நலன் விரும்பியாக இணைந்து ஒல்லாந்து செய்தியாளராக தனது ஒத்துழைப்பை முதலில் வழங்கியவர்.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சிய இடம்பெயர்வின் பின் ஐக்கிய இராச்சிய செய்திகளை துல்லியமாக தொகுத்து வழங்கி வந்த ஐயா அவர்கள், இறுதிவரை தனது முதுமையையும் பொருட்டாக கருதாமல் “ஐரோப்பிய செய்திகள்” என தனது வயோதிபம் தாங்கிய தடுமாற்ற குரலிலும் அனைத்து வகை செய்திகளையும் எமக்கு தொகுத்து வழங்கும் அந்த ஆர்வம் இன்றும் காதோரம் ஒலிக்கிறது. இனியும் மாலை 5.45 எனில் அனைத்து உள்ளங்களிலும் கண்டிப்பாக அந்த குரலின் இழப்பு ஆழ்மனதை தாக்கும் என்பது திண்ணமே!

அன்னாரின் பிரிவு எமக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்பதை உணர்ந்து வேதனையில் வாடுகிறோம்.
ஐயாவின் ஆத்ம சாந்திக்காய் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து, அவர்களின் குடும்பத்தினரின் துயரில் நாமும் இணைந்து கொள்கிறோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

TRTதமிழ் ஒலி வானொலி குடும்பம்
பிரான்ஸ்

பகிரவும்...