Main Menu

தமிழ், முஸ்லிம்களுக்கு இடையிலான உறவை சீர்குலைக்கவே ‘இடத்தேர்வு’ பிரச்சினை- வேலுகுமார்

முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ராஜபக்ஷ அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை என தெரிவித்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், வலது கையில் கொடுப்பதுபோல நடித்துவிட்டு, அதனை இடதுகையால் பறிக்கும் நயவஞ்சக அரசியலையே இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என சுட்டிக்காட்டினார்.

தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் வலுப்பெற்ற நல் உறவை சீர்குலைக்கும் வகையில் தற்போது ‘இடத்தேர்வு’ பிரச்சினையை அரசு கிளப்பியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற விசேட கலந்துரையாடலொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தை எவ்வாறு விரைவில் கட்டுப்படுத்தி, நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர முடியும் என உலக நாடுகள் கவனம் செலுத்திய நிலையில், கொரோனாவில்கூட அரசியல் நடத்தி, பேரினவாதிகளை திருப்திப்படுத்தும் முயற்சியில் இந்த அரசாங்கம் ஈடுபட்டது.

கொவிட் – 19 தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு உலகில் சிறு பரப்பளவுடைய நாடுகள்கூட அனுமதி வழங்கியபோதும் அதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை.

முஸ்லிம் மக்களின் மத உரிமை மறுக்கப்பட்டதுடன், நம்பிக்கையும் சிதைக்கப்பட்டது. தொழில்நுட்பக்குழு என ஒன்றைக்காரணம்காட்டி தனது குறுகிய அரசியல் நோக்கங்களை ஆளுந்தரப்பு நிறைவேற்றிக்கொண்டது. மக்களின் வலி,வேதனையில்கூட ‘அரசியல் சிற்றின்பம்’ கண்டனர்.

இந்நிலையிலேயே ஜெனிவாத் தொடரும் ஆரம்பமானது. முஸ்லிம் அமைப்புகள் இவ்விடயத்தை சர்வதேசம்வரை கொண்டுசென்றிருந்தன.

இதனால் சர்வதேச அழுத்தங்களை சமாளிப்பதற்காகவும் முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெறுவதற்காகவும் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முடியும் என்ற அறிவிப்பை பிரதமர் விடுத்தார். பிரதமரின் இந்த அறிவிப்பைக்கூட மொட்டு கட்சி உறுப்பினர்கள் நிராகரித்து அரசியல் செய்தனர்.

இதற்கிடையில் இம்ரான் கான் வந்துசென்ற பிறகு வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. அத்துடன் இப்பிரச்சினை தீர்ந்துவிடும் என மக்கள் கருதினர்.

ஆனால் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் வலுப்பெற்ற நல் உறவை சீர்குலைக்கும் வகையில் தற்போது ‘இடத்தேர்வு’ பிரச்சினையை அரசு கிளப்பிவிட்டுள்ளது.

அடக்கம் செய்வதற்கு பல இடங்கள் இருந்தும் அரசியலுக்காக இரணைதீவு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் பகைமையை உருவாக்கும் செயலே இது . எனவே, பொருத்தமான இடங்களில் சடலங்களை அனுமதிப்பதற்கு இடமளிக்க வேண்டும். மாறாக ஒரு இடம் என அறிவித்து, இது விடயத்தில் மேலும் இழுத்தடிப்பு செய்யக்கூடாது” என மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...