Main Menu

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குறைபாடுகள் தீர்த்து வைக்கப்பட வேண்டியவை – வினோ

தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்குள் பல குறைபாடுகள் இருக்கின்றன. அவை தீர்த்து வைக்கப்பட வேண்டியவை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ”எதிர் வரும் காலங்களில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்போடும், தமிழ் தேசியத்தோடும் பயணித்து எங்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு எங்களுடைய இனப்பிரச்சினையை தீர்த்து அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் தொடர்ந்தும் மக்களினுடைய ஆதரவு தேவைப்படுகின்றது.

அதே போல் மக்களினுடைய அன்றாட பிரச்சினைகள்,அத்தியாவசிய பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டிய ஒரு கடமைப்பாடும் எங்களிடம் சுமத்தப்பட்டுள்ளது.

நிச்சையமாக அந்த கடமையினை நாங்கள் சரியான முறையில் செய்து முடிப்போம்.தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு இந்த தேர்தலிலே ஒரு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை நாங்கள் உணர்கின்றோம்.

எதிர் காலத்தில் இந்த வீழ்ச்சிக்கு காரணமான விடையங்களை ஆராய்ந்து தமிழ் மக்களிடம் இருந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பை அன்னியப்படுத்த முனைகின்ற சக்திகளை இனம் கண்டு அதற்கான தீர்வினை நாங்கள் பரிகாரமாக ஏற்று செயல் படுத்த வேண்டிய கட்டாயம் எமக்கு உள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்குள் பல குறைபாடுகள் இருக்கின்றன.அவை தீர்த்து வைக்கப்பட வேண்டியவை.

குறிப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்வது தொடக்கம், தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு என கடந்த காலங்களில் ஒருங்கிணைப்புக் குழு என்று ஒரு குழு செயல்பட்டு வந்தது.

அது விரிவு படுத்தப்பட்டு ஒழுங்கான நிர்வாக கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு செயல் வடிவம் கொடுக்கப்பட்டு எதிர் காலத்தில் நடை முறைப்படுத்தப்பட்டால் மாத்திரமே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எதிர் கால வளர்ச்சியை கொண்டு வர முடியும். என அவர் மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...