ஜெயலலிதா இருந்தபோதே சசிகலா ஓரம் கட்டப்பட்டார் – ஜெயக்குமார்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோதே சசிகலாவை அவர் ஓரங்கட்டிவிட்டார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
செங்கல்பட்டில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு எதிராக தொடங்கப்பட்ட கட்சிதான் அ.ம.மு.க. ஜெயலலிதா இருந்தபோதே சசிகலாவை அவர் ஓரங்கட்டிவிட்டார்.
கட்சி விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற ஜெயலலிதாவின் கட்டளையின்படி மன்னிப்பு கேட்ட பிறகு தான் அவர் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார்
எம்.ஜி.ஆர்.இக்கு சொந்தமான அ.தி.மு.க. அலுவலகத்தை கைப்பற்றுவது நடக்காத காரியம். அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைப்போம் என பிரேமலதா கூறியது அவரது விருப்பம்.
அதற்காக தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை என சொல்ல முடியாது. பா.ம.க தே.மு.தி.க மற்றும் பா.ஜ.க தொடர்ந்து கூட்டணியில் இருக்கும்.
அ.ம.மு.க., தி.மு.க.வுடன் கூட கூட்டணி அமைக்கலாம். எந்த கட்சி தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தாலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது”என அவர் கூறினார்.