சோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி!
கொல்கத்தாவை சேர்ந்த மேஜிக் கலைஞர் ஹூக்ளி நதியில் சாகசம் செய்ய முயன்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கொல்கத்தா:
கொல்கத்தாவை சேர்ந்தவர் மண்ட்ரேக், 40 வயதாகும் இவர் உள்ளூரில் பிரபல மேஜிக் கலைஞர் ஆவார். இவர் நேற்று கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி நதியில் சாகச நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.
கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் நீரில் மூழ்கடிக்கப்பட்ட அவர், தனது மேஜிக் திறமை மூலம் பூட்டப்பட்ட கூண்டில் இருந்து வெளியே வரும் நோக்கில் இந்த சாகச நிகழ்ச்சியை மேற்கொண்டார்.
ஆனால், ஆற்று நீரில் மூழ்கிய அவர் வெகுநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனையடுத்து, அவரை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை.
இரவில் மீட்புப்பணி நிறுத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று மீண்டும் மேஜிக் கலைஞர் மண்ட்ரேக்கை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த ஹவுடினி என்பவர் தண்ணீரில் சாகசம் நிகழ்த்துவதில் கைதேர்ந்தவர். இவரை பின்பற்றி வந்த மண்ட்ரேக், தண்ணீரில் சாகசம் நிகழ்த்த வெகு நாட்களாக முயற்சி மேற்கொண்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கொல்கத்தாவின் ஹூக்ளி நதிநீரில் நடந்து சாகசம் நிகழ்த்த முயன்ற அவர், அதில் தோல்விகண்டது குறிப்பிடத்தக்கது.