சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய மகான் பற்றிய நூல் வெளியீடு
சைவ ஆசிரியர்களை தோற்றுவித்தல், தமிழ்மொழி பாடசாலைகளை உருவாக்குவது ஆகியவற்றின் ஊடாக சைவத்திற்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய மகான் அருணாசலம் அவர்களை கௌரவிக்கும் முகமாக அவர் பற்றிய நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிஸ் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
கனடிய சைவ சித்தாந்த மன்றம், ஐரோப்பாவின் முதல் தமிழ்வானொலியான ரி.ஆர்.ரி.தமிழ்ஒலி இணைந்து இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நூல் வெளியீட்டை தொடர்ந்து சிரேஷ்ட தமிழ்ஒலிபரப்பாளரும், இலங்கையின் மூத்த ஊடகவியலாளருமான இளையதம்பி தயானந்தா சிறப்புரையாற்றினார்.
சிறப்பு நிகழ்ச்சியாக புலம்பெயர்நாடுகளில் ஈழத்து அறிஞர்களின் புகழ் வலுவடைகிறதா நலிவடைகிறதா என்ற தலைப்பில் பட்டிமன்றமும் இடம்பெற்றது.
இவ்விழாவின் சிறப்பு அம்சமாக கடந்த 18ஆண்டுகளாக ஐரோப்பிய மண்ணில் தமிழ்ஒலிபரப்பு துறையின் சாதனையாளராக திகழ்ந்து வருபவரும், ஆயிரக்கணக்கான நேயர்களை தன்வசப்படுத்தியவரும், ஏ.எஸ்.ராஜா என அனைவராலும் அன்போடு அழைக்கப் பட்டவருமான அரசரத்தினம் ஸ்ரீஸ்கந்தராசா (ரீ.ஆர்.ரீ தமிழ் ஒலி வானொலி சிரேஷ்ட அறிவிப்பாளர்) அவர்களுக்கு கனடிய சைவ சித்தாந்த மன்றம் “அறிவிப்பாளர் திலகம்” என்ற சிறப்பு பட்டம் வழங்கி கௌரவித்தது.