Main Menu

சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் இராஜினாமா!

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து ஒரு வாரம் ஆன நிலையில், சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) தனது பதவியை இராஜினாமா செய்த 63 வயதான சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர் ஸ்டீபன் லோஃப்வென், புதிய தலைமையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளார்.

பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென், பதவி விலகினாலும், புதிய அரசாங்கம் அமையும் வரை, அவர் தலைமையிலான நிர்வாகம் வழக்கமான பணிகளை மேற்கொள்ளும்.

தனது பதவியை இராஜினாமா செய்தது குறித்து ஸ்டீபன் லோஃப்வென் கூறுகையில், “பிரதமராக என்னை விடுவிக்குமாறு நான் சபாநாயகரிடம் கோரியுள்ளேன். இது நான் எடுத்த மிக கடினமான அரசியல் முடிவு.

கொரோனா வைரஸ் தொற்று கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருப்பதால், முன்கூட்டியே தேர்தல் நடத்துவது சிறந்த முடிவல்ல” என கூறினார்.

மாற்று தலைமையை முடிவு செய்யாமல், தனக்கு எதிராக வாக்களித்ததாக ஸ்டீபன் லோஃப்வென், குற்றம்சாட்டினார்.

சுவீடனில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை கட்டுப்பாடுகளை எளிதாக்க அரசாங்கம் திட்டமிட்டது. இதற்கு இடதுசாரி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து, அரசாங்கத்துக்கான ஆதரவை திரும்ப பெற்றது. இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில், மொத்தம் உள்ள 349 உறுப்பினர்களில், 181 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். இதனால் தீர்மானம் வெற்றி பெற்றது.

சுவீடனில் தற்போது புதிய அரசாங்கம், அல்லது இடைக்கால நிர்வாகம் பொறுப்பேற்றாலும் அடுத்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை மட்டுமே பொறுப்பில் இருக்கும்.

சுவீடனில் எதிர்க்கட்சியால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வெளியேற்றப்பட்ட முதல் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தனது கட்சி ஸ்டீபன் லோஃப்வெனுக்கு எதிராக வாக்களித்திருந்தாலும், ஒருபோதும் வலதுசாரி தேசியவாத அரசாங்கம் அமைவதற்கு ஆதரவு அளிக்காது என இடதுசாரி கட்சி தலைவர் நூசி தாட்கோஸ்டர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...