Main Menu

சீன தூதரகத்தை மூடுமாறு அமெரிக்கா அதிரடி உத்தரவு!

அமெரிக்காவின் ரெக்ஸாஸ் மாநிலம், ஹூஸ்ரனில் உள்ள சீன துணைத் தூதரகத்தை வரும் வெள்ளிக்கிழமைக்குள் மூடுமாறு அமெரிக்கா சீனாவுக்கு உத்தரவிட்டுள்ளது

அமெரிக்க அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த உத்தரவு மூர்க்கத்தனமான மற்றும் நியாயமற்றது என சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்காவை சீனா வலியுறுத்தியுள்ளது.  அத்துடன், தவறான பாதையில் செல்லவேண்டும் என வலியுறுத்தினால் சீனா உறுதியான எதிர்விளைவுகளுடன் செயற்படும் என்று அந்நாடு அமெரிக்காவுக்கு எச்சரித்துள்ளது.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே சில காலமாக பதற்றம் அதிகரித்து வருகிறது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், வர்த்தகம் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக சீனாவுடன் பலமுறை மோதிக்கொள்ளும் நிலை காணப்படுகிறது.

குறிப்பாக அண்மையில் ஹொங்கொங்கில் சர்ச்சைக்குரிய புதிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா விதித்துள்ளமை அமெரிக்காவை சீற்றமடையச் செய்துள்ளது.

இதனைவிட அமெரிக்க நீதித்துறை, கொவிட்-19 தடுப்பூசிகளை உருவாக்கும் ஆய்வகங்களை குறிவைத்து சீன ஹக்கர்கள் ஊடுருவல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அமெரிக்க நீதித்துறை கண்டறிந்துள்ளது.

இவ்வாறு, கொரோனா ஆய்வுகளை மேற்கொள்ளும் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனங்களுக்குள் ஊடுருவி தரவுகளைத் திருடுவதற்கு இரண்டு சீன ஹக்கர்களுக்கு சீன அரசு உதவி செய்துள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் அமெரிக்காவால் ஹூஸ்ரனில் உள்ள சீன துணைத் தூதரகத்தை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பகிரவும்...