Main Menu

சிறுபான்மை இன மக்களைக் கண்காணிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடவில்லை – அரசாங்கம்

இலங்கையில் சிறுபான்மை இன மக்களைக் கண்காணிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைகளுக்கான சுதந்திரம் குறித்து ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் என் வுயுல் கருத்து தெரிவித்திருந்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே கிளெமென்ட் என் வுயுல் இதனை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதனை நிராகரித்துள்ள ஜெனீவாவிற்கான இலங்கையின் பதில் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி தயானி மென்டிஸ், தேசிய பாதுகாப்பு நலன்களை அடிப்படையாகக்கொண்டு வழமையான சோதனை நடவடிக்கைகள் மாத்திரம் இடம்பெறுகின்றன என்றும் விசேடமாக எந்தக் குழுவைச் சேர்ந்த மக்களையும் கண்காணிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இவை இடம்பெறுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகெங்கும் அதிகரித்துவரும் தீவிரவாத சக்திகளின் நுட்பமான நடவடிக்கைகளின் மத்தியில் எந்த நாடும் அதன் தேசிய நலன்களை சமரசம் செய்வதால் மோசமான விளைவுகள் ஏற்படலாம் என இலங்கை கருதுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினரை சட்ட அமுலாக்கல் தரப்பினரிடமோ அல்லது மனித உரிமைகள் அல்லது பொலிஸ் ஆணைக்குழுவிடமோ முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலம் அதன் மூலம் இந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இன சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவது குறித்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கும் அனைத்து நம்பிக்கைகளையும் பின்பற்றுபவர்களையும் பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தயானி மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...