Main Menu

கோவையில் 7 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை: சந்தேகநபருக்கு மரண தண்டனை

கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு மரண தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித்துள்ளது.

பன்னிமடையைச் சேர்ந்த 1ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி,  கடந்த மார்ச் 25ஆம்  திகதி காணாமல் போனார். மறுநாள் அவரது வீட்டின் பின்புறத்தில் துணியால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

மேலும் அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

இது தொடர்பாக துடியலூர் பொலிஸார், சிறுமியின் வீட்டிற்கு எதிரே வசித்து வந்த தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை கடந்த மார்ச் 31ஆம் திகதி  கைது செய்தனர்.

இந்த வழக்கின் இறுதி வாதங்கள் கடந்த 19ஆம் ஆம் திகதி முடிவடைந்து, 27-ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இதனிடையே உயிரிழந்த சிறுமியின் தாயார், மகளிர் நீதிமன்றத்தில்  நேற்று  மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,  “இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சந்தோஷ்குமாரைத் தவிர்த்து மற்றொரு ஆண் நபரின் டி.என்.ஏ. கலப்பு உள்ளது.

கடந்த மாதமே இந்த அறிக்கை வந்தபோது புலன் விசாரணை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தான் முன்பே கூறியதுபோல கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு வாய்ப்புள்ளதால், மீண்டும் இந்த வழக்கை பெண் அதிகாரி தலைமையில் விசாரிக்க வேண்டும்” என அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சிறுமியின் தாய் கோரிக்கையை ஏற்று மறுவிசாரணைக்கு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...