கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது
பிரித்தானியாவில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ள நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலை, மிடில்செக்ஸில் உள்ள மவுண்ட் வேர்னன் புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவருக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வார இறுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்திருந்த நிலையில் இன்று பிற்பகல் நோயாளிகளின் எண்ணிக்கை 40 ஐ எட்டியுள்ளது.
இன்று இனங்காணப்பட்ட நான்கு புதிய நோயாளிகளும் இத்தாலிக்குப் பயணம் மேற்கொண்டு திரும்பிவந்தவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று தலைமை தாங்கிய (Cobra meeting) அவசரகால அமைச்சரவைக் கூட்டத்தில் பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறைத் தலைவர்கள் தெரிவித்தனர்.
அவசரகால அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர்,கொரோனா வைரஸ் பரவுவது எதிர்வரும் நாட்களில் மிகவும் ஆபத்தானதாக மாறும் சாத்தியமுள்ளது என்று கூறினார்.
இதனைக் கட்டுப்படுத்தும் திட்டம் அரசாங்கத்தினால் நாளை செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் மாற் ஹன்கொக் தெரிவிக்கையில்; நகரங்களை முடக்குவதற்கான திட்டம் எதுவும் முன்னெடுக்கப்படமாட்டாது என்று கூறினார்.
நன்றி amp.flipboard.com