Main Menu

கனடா -இந்தியா இடையிலான மோதலானது எமது இராணுவ உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது!

கனடா இந்தியா இடையேயான தூதரக மோதலானது இரு நாட்டு இராணுவ உறவிலும்  பாதிப்பை ஏற்படுத்தாது என கனடாவின் இராணுவ துணைத் தளபதி மேஜர் ஜெனரல் பீட்டர் ஸ்காட் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று தொடங்கிய இந்தோ – பசிபிக் ராணுவத் தலைவர்களின் 3 நாள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “ஜஸ்டின் ட்ரூடோ என்ன கூறினார் என்பதை நான் நன்கு அறிவேன். நிஜார் கொலை வழக்கில் இந்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று அவர் கோரி இருக்கின்றார்.

ஆனால், இந்த விவகாரம் இந்தோ – பசிபிக் மாநாட்டில் எங்களுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இராணுவ ரீதியிலான உறவுகளை மேம்படுத்தவே நாங்கள் இங்கு இருக்கிறோம். அந்தப் பிரச்சினையை அரசாங்கங்கள் அவர்களுக்குள்ளாகவே சமாளித்துக் கொள்வார்கள்.

இந்தோ – பசிபிக் ராணுவத் தளபதிகளின் மாநாட்டின் ஓர் அங்கமாக நாங்கள் இங்கு இருப்பதற்கு நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். இந்தோ – பசிபிக் பிராந்திய நட்பு நாடுகளுடன் பயிற்சி மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை கனடா எப்போதும் மதிக்கின்றது.

இந்த மாநாட்டில் பங்கேற்றிருப்பதன் மூலம் மற்ற நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கவும், அந்த நாடுகளின் ஆர்வங்களை அறிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். மாநாட்டை நடத்தும் இந்தியாவுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியா – கனடா ராணுவங்களுக்கு இடையே பயிற்சிகளை பரிமாரிக்கொள்வது, அனுபவங்களை பரிமாறிக்கொள்வது ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளும் ஒன்றிடம் இருந்து மற்றொன்று கற்றுக்கொள்ள முடியும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பகிரவும்...