Main Menu

உலகிலேயே முதல் காகிதமற்ற அரசாக மாறியது துபாய்

உலகிலேயே 100 சதவீதம் காகிதம் இல்லாத அரசாங்கமாக துபாய் மாறியுள்ளதாக எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் அறிவித்துள்ளார்.

துபாயில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் காகிதமில்லா டிஜிட்டல் நகரமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தை 5 கட்டங்களாக பிரித்து பட்டியலிடப்பட்டன.

இதன் 5-வது கட்டத்தின் முடிவில், துபாயில் 45 அரசு துறைகளும் காகிதமற்றவையாக மாற்றப்பட்டன. இதன்மூலம், உலகின் முதல் காகிதமில்லா அரசு என்ற பெருமையை துபாய் பெற்றுள்ளது. இந்த துறைகள் 1,800 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேவைகள் மற்றும் 10,500 க்கும் மேற்பட்ட முக்கிய பரிவர்த்தனைகளை வழங்குகின்றன.

இதுகுறித்து, எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்த சாதனை புதுமை, படைப்பாற்றல் மற்றும் எதிர்காலத்தில் கவனம் செலுத்தும் பயணம். இது துபாயின் உலக முன்னணி டிஜிட்டல் மூலதனம் மற்றும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை மேம்படுத்தும். அரசாங்க செயல்பாடுகள் மற்றும் சேவைகளை வடிவமைப்பதில் இது ஒரு முன்மாதிரியாக அதன் நிலையை வலுப்படுத்துகிறது.

இத்திட்டத்தின் மூலம், துபாய் அரசாங்கத்திற்கு 2650 கோடி ரூபாய் (350 மில்லியன் அமெரிக்க டாலர்) சேமிக்கப்படுவதுடன், 14 மில்லியனுக்கும் அதிகமான மனித வேலை நேரமும் மிச்சமாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும்...