Main Menu

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் தமிழ் பெண்ணொருவர் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

அம்பிகை செல்வகுமார் என்ற இலங்கை தமிழ் பெண்ணே, 27ஆம் திகதியான இன்று (சனிக்கிழமை) முதல் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

தியாகி திலீபனின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளைக் காட்சிப்படுத்தியவாறு, அவர் தனது போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு விடுதலை, நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தமது குடும்பம் நீண்ட காலமாகவே சனநாயகக் களத்தில் குரல் கொடுத்துவந்ததாக குறித்த பெண் கூறியுள்ளார்.

இந்நிலையில், தற்போது ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மீண்டும் சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான இனவழிப்பை சிறீலங்கா அரசாங்கம் தொடர்வதற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான இணையனுசரணை நாடுகள் இணைந்து தீர்மானத்தை முன்வைக்கவுள்ள செய்தி உலகம் எங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களுக்கும் மனித நேயத்தை நேசிக்கும் அனைவருக்கும் மன வேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தாய் நிலத்தில் நீதிக்காக ஏங்கித் தவிக்கும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி தான், சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

பகிரவும்...