Main Menu

இந்திய படகுகளின் அத்து மீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி கடல் தொழிலாளர்களால் 19 ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டம்

இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி யாழ். இந்தியத் துணைத் தூதரகம் முன்பு கடற்றொழிலாளர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

எமது யாழ்ப்பாண மாவட்ட கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

இந்திய மீனவர்கள் எமது வாழ்வாதாரத்தையும்  தொழிலையும்  தொடர்ச்சியாக அழித்து வரும் நிலையில் இலங்கை அரசாங்கத்திடமும் இந்திய அரசாங்கத்திடமும் எமது ஆதங்கங்களை வெளிப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அண்மையில் இந்தியச் சட்டவிரோத  மீன்பிடியாளர்களைக் கட்டுப்படுத்துமாறு கோரி இலங்கை கடல் எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரகத்திடம் கோரிக்கை மனு கையளித்தோம். ஆனால், பயன் ஏதும் ஏற்படவில்லை.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன்பு தொடர்ச்சியான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

எமது போராட்டத்துக்கு ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த சங்கங்கள், சமாசங்கள் மற்றும் சம்மேளனங்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...